அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே விஜயகாந்த் தேமுதிக-வை தொடங்கினார். அதை தெரிந்துதான் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என எண்ணுகிறேன்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். டிடிவி.தினகரன் அதிமுக கூட்டணிக்கு வந்ததன் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வாக்குகள் முழுமையாக எங்களுக்கு வரும். அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்று பழனிசாமி தனித்து ஆட்சி அமைப்பார்.
திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே கேப்டன் தேமுதிக-வை ஆரம்பித்தார். இதைத் தெரிந்து அவர்கள் முடிவு எடுப்பார்கள் என எண்ணுகிறேன். முடிவு அவர்களது விருப்பம். எங்கள் கூட்டணிக்கு இன்னும் சிலர் வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளோம். அதற்காக கூட்டணிக்காக மடிப்பிச்சை ஏந்தும் அளவுக்கு அதிமுக பலவீனமாக இல்லை. அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும். அதேபோல் திமுக-வும் ஆட்சியில் பங்கு கொடுத்து கூட்டணி அமைக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் அதிமுக வழியைத்தான் திமுக-வும் பின்பற்றும்.
எங்களை மேலும் பலப்படுத்தி கொள்ளவே கூட்டணி. அதேசமயம், நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல என்பதை கூட்டணி வைப்பவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.