ராமேசுவரம்: இலங்கைத் தமிழர்கள் 89 ஆயிரம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிப்பவர்கள்.
இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது நீண்டகால விசா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதை இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ச வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வசிக்கும் 89,000 இலங்கைத் தமிழர்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து, கௌரவம் மற்றும் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சியை வரவேற்கிறோம். பல தலைமுறைகளாக அகதிகள் முகாம்களில் வாழும் மக்களுக்கு இது நம்பிக்கையை அளிக்கும்.
கடந்த காலங்களிலும், தேர்தல் நேரங்களிலும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எனவே, வரவிருக்கும் மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட அரசியல் நகர்வாகவோ அல்லது தேர்தல்கால அரசியலாக்கப்படும் முயற்சியாகவோ இது இருக்கக் கூடாது. இவ்வாறு நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.