சென்னை: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பொன்னேரி தம்பதி தவற விட்ட நகை பையை எழும்பூர் ரயில்வே போலீஸார் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார். இவர் பழைய நகைகளை மாற்றுவதற்காக தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் மின்சார ரயிலில் நேற்றுமுன்தினம் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்தார்.
அங்கிருந்து மின்சார ரயிலில் தியாகராய நகர் செல்வதற்காக, பூங்கா ரயில் நிலையத்துக்கு உறவினர்களுடன் வந்தார். தொடர்ந்து, கடற்கரை - தாம்பரம் நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயிலில் பரத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, பரத்குமாரின் மனைவி பூங்கா ரயில் நிலையத்திலேயே கைப்பையை மறந்து வைத்து விட்டு, மின்சார ரயிலில் ஏறியது தெரியவந்தது. அந்த பையில் இரண்டு செல்போன்கள், இரண்டு சவரன் நகை, ரூ.500 ஆகியவை இருந்தன.
அதேநேரத்தில், பூங்கா ரயில் நிலையத்தில் நடைமேடையில் ரோந்து சென்ற ரயில்வே போலீஸாரிடம் அந்த பை சிக்கியது. அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் மேற்படி நகைகள், செல்போன்கள், பணம் இருந்தன.
இதையடுத்து, அந்த பையை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு போலீஸார் கொண்டு வந்தனர். இதற்கிடையில், நகை, செல்போன்கள் அடங்கிய பையை தவறவிட்டது தொடர்பாக, எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பரத்குமார் தனது மனைவியுடன் வந்தார்.
அப்போது ரயில்வே போலீஸார், பூங்கா நகர் ரயில் நிலையத்தில் தாங்கள் ஒரு கைப்பையை ரோந்து பணியின் போது கைப்பற்றியதாக தெரிவித்து அதை தம்பதியிடம் காண்பித்தனர்.
அது தங்களுடையது தான் என பரத்குமார் தம்பதியினர் தெரிவித்தனர். அதில் என்னென்ன வைத்திருந்தீர்கள் என கேட்டு விசாரித்து, அப்பை அவர்களுடையது தான் என போலீஸார் உறுதி செய்து, அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு பையை ஒப்படைத்தனர்.
தவறவிட்ட நகை, செல்போன்கள் இருந்த பை மீண்டும் கிடைத்ததை அடுத்து பரத்குமார் தம்பதியினர் போலீஸாருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றனர். நகை பையை மீட்டு ஒப்படைத்த போலீஸாரை ரயில்வே காவல் உயரதிகாரிகள் பாராட்டினர்.