ராகுல் காந்தி
நாகர்கோவில்: தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாளை (20-ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட மண்டைக்காடு அருகே லட்சுமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்துக்கு வந்து இறங்குகிறார். அதே மைதானத்தில், காலை 10 மணியளவில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் மதியம் 12.30 மணியளவில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியிலும், அதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலும் ராகுல் பேசுகிறார். அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் மூன்று தொகுதிகளிலுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலையில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.