அமைச்சர் ரகுபதி |கோப்புப் படம்
அதிமுக ஆட்சியைவிட சட்டம் - ஒழுங்கு தற்போது சிறப்பாக உள்ளதாகவும், பொது மக்கள் பாதுகாப்போடு இருப்பதாகவும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார்.
நாங்கள் 2 தினங்களுக்கு முன்பு தமிழக மக்களுக்கு சிலிண்டர் தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால், பழனிசாமி மாநில அரசை கண்டித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார்.
அதில் கூட காஸ் சிலிண்டர் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் எனும் கோரிக்கையை தனது தோழமை கட்சியான பாஜக-விடம் முன்வைக்க மறுத்துவிட்டார். அதிமுக ஆட்சியிலும் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தது. குட்காவுக்காக ஒரு அமைச்சர் மீதே எஃப்ஐஆர் போடப்பட்டது எல்லாம் அதிமுக ஆட்சியில் தான் நடந்தது. இந்த 75 நாட்களில் 246 கொலைகள் நடந்திருப்பதாக அவர் சொல்கிறார்.
அதிமுக ஆட்சியில் தான் கொலைகள் அதிகம் என்பது தரவுகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த புள்ளி விவரங்களை மறுத்து பழனிசாமி சொல்லி இருந்தால் அது நியாயம். எனவே, அதிமுக ஆட்சியைவிட இன்றைக்கு சட்டம் -ஒழுங்கு காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள்.
அதேபோல், பெண்கள் மீது திடீரென பழனிசாமிக்கு பாசம் வந்துள்ளது. பல்வேறு சர்வேக்களில் 80 சதவீத பெண்கள் திமுக கூட்டணிக்குத் தான் வாக்களிக்கப் போகிறார்கள் எனும் தகவல்கள் வருகின்றன. அதை தடுப்பதற்காக தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு போலி நாடகத்தை உருவாக்க முயற்சிக்கிறார். ஒரு சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கலாம். அதை காவல் துறை உடனே கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கடந்த மாதம் பழனிசாமி பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். சில நாட்களில் பயணத்தை நிறுத்திவிட்டார். பிரச்சாரப் பயணத்தில் தோல்வி கண்ட ஒரு அரசியல் தலைவர் எனில் அது பழனிசாமி தான். பழனிசாமியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தனது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் அவர் அதிமுக-வை நடத்துகிறார். தேர்தலில் வெற்றி பெறும் ஆர்வம் அவருக்கு கிடையாது.
பழனிசாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். நிறைய வழக்குகள் வருவதாகச் சொல்கிறார். பெண்களின் ரகசியம் காப்பாற்றப்படுவதால் தான் அதிக எண்ணிக்கையில் புகார்கள் வருகிறது. மேலும், மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே வரிகள் உயர்த்தப்பட்டன.
அமைதியாக இருந்த ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனை கலவரங்கள் என்பதை பார்க்க வேண்டும். இதுதான் பாஜகவின் உண்மை முகம். கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமுகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. வரும் 23-ம் தேதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு முறையான அறிவிப்புகள் வெளியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.