தொகுதி பங்கீட்டு உடன்பாட்டை உறுதிப்படுத்திய புதுச்சேரிக்கான என்டிஏ கூட்டணித் தலைவர் ரங்கசாமி. உடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர்.
புதுச்சேரி: புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரமாக இழுபறியாக இருந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்பாடு ஏற்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்கள், பாஜக 10 இடங்கள், அதிமுக, லஜக தலா 2 இடங்களில் போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு ஆட்சியில் உள்ளது. என்ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி இக்கூட்டணிக்கு தலைமை வகிக்கிறார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு மீது அதிருப்தி நிலவியதால், இதே கூட்டணியில் ரங்கசாமி நீடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சூழலில், கடந்த மாதம் காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ரங்கசாமி சந்தித்து, என்டிஏ கூட்டணியில் தொடர்வதை உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுரானா ஆகியோர் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, என்டிஏ கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்கள், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளான அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 14 இடங்கள் என்று முடிவானது.
இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயகக் கட்சி, என்டிஏ அரசை விமர்சித்ததால், அக்கட்சியை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரம், பாஜக அமைச்சர் ஜான்குமார் அக்கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், லஜக வளர்ச்சிக்கு பாஜக உறுதுணையாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.
இந்த அதிருப்தியால், தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை ரங்கசாமி கடந்த சில நாட்களாக தவிர்த்தார். தனது அதிருப்தியை கட்சி நிர்வாகிகள் மூலம் பாஜக தலைமைக்கும் தெரியப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 19-ம் தேதி மீண்டும் புதுச்சேரிக்கு வந்தார். ஆனால், அதை புறக்கணிக்கும் விதமாக, மதுரை, திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ரங்கசாமி புறப்பட்டுச் சென்றார். இதனால், கூட்டணியின் மற்ற கட்சியினருடன் மன்சுக் மாண்டவியா பேச்சு நடத்தினார். ரங்கசாமியின் வருகைக்காக காத்திருந்தார்.
இதற்கிடையே, பாஜக மேலிட நிர்வாகிகள் நேரடியாக ரங்கசாமியிடம் பேசினர். இந்நிலையில், நேற்று புதுச்சேரி திரும்பிய ரங்கசாமி, கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு, வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்.
அதன்பிறகு, பிற்பகலில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை ரங்கசாமி சந்தித்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
முதல்வர் ரங்கசாமி: என்டிஏ கூட்டணியில் தொடர்கிறோம். அதில் மாற்றம் இல்லை. புதுச்சேரிக்காக, மத்திய அரசு பல நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி ரூ.3 ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்துள்ளார். மீண்டும் என்டிஏ அரசு வந்தால், மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும். என்டிஏ கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி (லஜக) இணைந்துள்ளது. ‘‘இது கூட்டணிக்கு இன்னும் பலமாக இருக்கும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இதையடுத்து, புதிய கட்சியும் கூட்டணியில் இணைந்துள்ளது. என்டிஏ கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் தெரிவிப்போம்.
மத்திய அமைச்சர் மாண்டவியா: முதல்வர் ரங்கசாமிதான் புதுச்சேரிக்கான என்டிஏதலைவர். அவர் தலைமையில் தேர்தலைச் சந்திக்கிறோம். என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிடும். பாஜக, அதிமுக, லஜக 14 இடங்களில் போட்டியிடும். என்டிஏ கூட்டணி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி அமைக்கும். என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது. தேர்தல் வாக்குறுதியில் இதுபற்றி தெரிவிக்கப்படும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு பிரச்சாாரத்துக்கு வருவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொகுதிப் பங்கீட்டில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக, லஜகவுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைதேர்தலில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததால் அக்கட்சிக்கு தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக இம்முறை 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
என்டிஏ கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. புதுச்சேரியில் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 23-ம் தேதி (திங்கள்கிழமை) என்பது குறிப்பிடத்தக்கது.