தமிழகம்

டூவீலரில் பேரவை வந்த புதுச்சேரி எம்எல்ஏ - நம்பர் பிளேட், ஹெல்மெட் இல்லாததால் ரூ.1,500 அபராதம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: அரசு காருக்கு டிரைவர் இல்லாததால் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஆளுங்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் இரு சக்கர வாகனத்தில் வந்தார். அவர் வந்த வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாததாலும், ஹெல்மெட் அணியாமல் வந்ததாலும் புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் ரூ.1500 அபராதம் விதித்துள்ளனர்.

புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கார்களுக்கு ஓட்டுநர்கள் வழங்கப்படவில்லை. இதை பதிவு செய்யும் விதமாக இன்று (சனிக்கிழமை) காலை என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்‌ சட்டப்பேரவைக்கு ஸ்கூட்டரில் வந்தார்.

“அரசு அதிகாரிகள் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களை வைத்துள்ளனர். ஆனால், எம்எல்ஏக்களுக்கு மட்டும் ஓட்டுநர்களை வழங்குவதில்லை. காருடன் ஓட்டுநரை வழங்க சாமியே (முதல்வர்) வரம் கொடுத்தாலும் பூசாரிகள் (அரசு அதிகாரிகள்) தருவதில்லை” என்று தனது வருத்தத்தை தெரிவித்தார்.

ரூ.1500 அபராதம் விதித்த போலீஸார்

இந்நிலையில், புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீஸார், வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ ஓட்டி வந்த டூவீலரில் நம்பர் பிளேட் இல்லாததற்கு ரூ.5000ம், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு ரூ.1000 என மொத்தம் ரூ.1,500 அபராதத்தை இன்று பிற்பகல் விதித்தனர். இதற்கான சலானும் வாகனத்தின் உரிமையாளருக்கு செல்போனில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் லையாபுரி மணிகண்டன் சட்டப்பேரவை அருகே தலைக்கவசம் இல்லாமல், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்தார் என சலானில் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT