சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையாமல் திசை மாறியது. ராக்கெட்டின் 3-வது நிலையில் பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறையின் பயன்பாட்டுக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ள இஓஎஸ்-என்1 (அன்விஷா) என்ற அதிநவீன செயற்கைக் கோள், சென்னை ஆர்பிட் எய்டு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்துள்ள ‘ஆயுள்சாட்’ செயற்கைக் கோள், ஸ்பெயின் நாட்டின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய ‘கிட்’ எனும் பூமிக்கு மீண்டும் திரும்பி வரும் விண்கலம் உள்ளிட்ட 15 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் மூலம் நேற்று காலை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.
புவி கண்காணிப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்புக்கான தரவுகளை நிகழ்நேரத்தில் வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இஓஎஸ்-என்1 செயற்கைக் கோளை 505 கி.மீ. தொலைவு கொண்ட சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. 2 திரவ எரிபொருள் இன்ஜின், 2 திட எரிபொருள் இன்ஜின் என மொத்தம் 4 நிலைகளை உள்ளடக்கியது.
இந்நிலையில், திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 15 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் நேற்று காலை 10.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 8 நிமிடங்களில் முதல் 2 நிலைகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டன. பின்னர் 3-ம் நிலையான பிஎஸ் 3 அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது, எதிர்பாராதவிதமாக ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. திட்டமிட்ட இலக்கைவிட்டு திசை மாறிய ராக்கெட், அடுத்த சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையம் உடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து, இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறும்போது, ‘‘பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட்டின் 3-வது நிலையின் செயல்பாடுகள் இறுதி வரை திட்டமிட்டபடிநிகழ்ந்தன.
ஆனால், அதன் பின்னர், நிர்ணயிக்கப்பட்ட பாதையில் இருந்து ராக்கெட் விலகியது. இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து, பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்’’ என்றார்.
கடந்த 2025 மே மாதம், புவிகண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஓஎஸ்-09 ரிசாட்-1பி என்ற செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட்டும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சென்றடையவில்லை. அதிலும் 3-வது நிலையில்தான் பிரச்சினை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.