வேளாண்அமைச்சர் வினோத் ஆய்வு
தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் உள்ள உழவர் சந்தையில் தரமற்ற எடை இயந்திரங்கள் குறித்த அனைத்து தரவுகளையும் உடனே வழங்க வேண்டும்,” என வேளாண் துறை அமைச்சர் வினோத் உத்தரவிட்டார்.
கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள உழவர் சந்தையில் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு சேதமடைந்துள்ள குளிரூட்டும் அறை, போதிய மின் விளக்கு இல்லாதது, தரமற்ற குடிநீர், காலியாக உள்ள கடைகளை பார்வையிட்டார்.
அப்போது, தனியாருக்கு கடைகள் அமைக்க அனுகவும் என தகவல் பலகையை வைத்திருப்பதை அறிந்து, உடனடியாக அகற்ற வேண்டும், அதற்கு பதிலாக விவசாயிகள் கடை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உழவர் சந்தை உழவருக்கே என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள தரமற்ற எடை இயந்திரத்தை பார்வையிட்டு, எங்கு, யார் வாங்கியது, எந்த அதிகாரி ஒப்புதல் அளித்தது உள்ளிட்ட அனைத்து தரவுகளை உடனடியாக வழங்க வேண்டும் என அங்குள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதே போல் அங்கு மாலை நேரத்தில் கடை ஏன் நடத்துவதில்லை என வியாபாரிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் மாலை நேரத்தில் குடி போதையில் வந்து தகராறு செய்வதால் கடை நடத்துவதில்லை என தெரிவித்தார். வியாபாரிகளின் அனைத்து கோரிக்கையும் உடனடியாக தீர்வு காணப்படும் என அவர்களுக்கு உத்தரவாதம் அளித்தார்.
இதே போல் கும்பகோணம் மாநகர் பகுதியில் உள்ள வாய்க்கால்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கும்பகோணத்திற்குள் செல்லும் 5 வாய்க்கால்கள் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டும், பல்வேறு பகுதிகள் தூர்ந்து, புதர் மண்டியும் காட்சியளிக்கின்றன. ஆனால் வாய்க்கால்களில் கழிவுகள் கலப்பதால் தூர்வார முடியாமல் இருந்து வந்தது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள், வேளாண் துறை அமைச்சர் வினோத்திடம் வாய்க்கால்களை தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் விட வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
இதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத், தேப்பெருமாநல்லூர், பழவத்தான்கட்டளை வாய்க்கால்களில் கழிவுநீர் கலக்கும் இடங்கள் மற்றும் புதர் மண்டியுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டப்பின் செய்தியாளர்களிடம் கூறியது: கும்பகோணம் மாநகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் ஓடும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த வாய்க்கால்களைத் தூர் வாருவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, இன்னும் ஒரு சில நாட்களில் தூர்வாரும் பணிகள் தொடங்க உள்ளன.
இப்பணிகள் முழுமையாக முடிவடையும் போது இந்த வாய்க்கால்களில் எளிதாகக் காவிரி நீரைக் கொண்டு வர முடியும். இதன் மூலம் கும்பகோணம் தூய்மையான மாநகராக மாறுவதோடு, நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த முயற்சிக்கு கும்பகோணத்தில் வசிக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.
அவருடன் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.