சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு எதிராக கோஷம் எழுப்பிய அதிமுகவினர். | படம்: எஸ்.குரு பிரசாத் |
சேலம்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் ‘அதிமுகவின் துரோகிகள்’ என குற்றம்சாட்டி சேலத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை, பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் எதிர்த்து வாக்களித்தனர்.
ஆனால், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் பிரிந்து, தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்படும் நிலை உள்ளது.
இந்தச்சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அதிமுக மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் பாலு, சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வினோத் உள்பட அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு, சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள
எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலையணிவித்தனர் மேலும், அதிமுகவுக்கு துரோகம் செய்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோரை துரோகிகள் என குற்றம்சாட்டியதுடன், அவர்களை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பதவி விலக வலியுறுத்தி சேலம் மாநகரில் ஒட்டப்பட்ட போஸ்டர்.
இதற்கிடையே, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் இல்லத்துக்கு செல்லக்கூடிய சாலையில், ‘பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமி விலக வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் பாதுகாக்கப்பட்ட அதிமுகவை, திமுகவிடம் அடகுவைப்பதற்கு முயற்சி செய்த பழனிசாமி, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும்’ என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
பல்வேறு மாவட்டங்களில்...
இதேபோல் நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்களிலும் தொண்டர்கள் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு வலுத்து வருவது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.