சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைதான கரூர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைவிட செல்வாக்கு மிக்கவராக உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டாஸ்மாக் வழக்கில் கைதாகியுள்ள கார்த்திக்கை லஞ்ச ஒழிப்புத் துறையினர், ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரணை நடத்தி விட்டனர்.
வழக்குத் தொடர்பான ஆவணங்களையும் ஏற்கெனவே பறிமுதல் செய்துவிட்டனர். இந்த வழக்கில் ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்காக, கார்த்திக்குக்கு ஜாமீன் வழங்காமல் நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க வேண்டியதில்லை.
எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். பதிலுக்கு காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த வழக்கின் விசாரணை இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது.
விசாரணை தொடங்கி 25 நாட்கள் ஆன நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்திக்குக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
உண்மையில் செந்தில் பாலாஜியைவிட செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திக் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க தயங்குவர். எனவே கார்த்திக்குக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறையில் உள்ள கார்த்திக்குக்கு ஜாமீன் கோரும் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.