கோப்புப் படம்
சென்னை: ‘தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதாவானது உயர் கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சி’ என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழகச் சட்டப்பேரவையில் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்குவதற்கான குறைந்தபட்ச நிலம் மற்றும் வைப்புநிதி தேவைகளைக் குறைக்கும் வகையில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது உயர் கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சியாகும். தனியார் பல்கலைக் கழகங்களையும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும்.
ஏற்கெனவே, தவெக அரசு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் சென்னையில் தனது புதிய சர்வதேச கிளை வளாகத்தை நிறுவ உள்ளது. இதற்கு தவெக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனியார் பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீடு நடைமுறை படுத்தப்படுவதில்லை. எனவே இது சமூக நீதிக்கும், அடித்தட்டு சமூக மாணவர்களுக்கும் எதிராக அமையும். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவப் பல்கலைக் கழகங்களை திறந்திட வசதியாக, நிலத் தேவை என்பது இம்மசோதா மூலம் குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் பல்கலைக் கழகங்களைத் தொடங்க, குறைந்தது 100 ஏக்கர் தொடர்ச்சியான நிலம் வேண்டும் என்பது மாற்றப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதிக்கு 12 ஏக்கரும், இதர மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு 18 ஏக்கரும், இதரப் பகுதிகளுக்கு 25 ஏக்கரும் என நிலத் தேவை குறைக்கப்பட்டுள்ளது.
தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவுவதற்கான நிரந்தர அறக்கட்டளை நிதி தேவையும் குறைக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் நோக்குடன் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நமது நாட்டில் உயர்கல்வி பயில தகுதியுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நமது வேலை வாய்ப்புகள், அறிவியல் தொழில்நுட்பத் தேவைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி, பல்துறை உழைப்பு சக்திகளின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசே போதிய உயர் கல்வி நிறுவனங்களையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் துவக்குவது தான் சரியாக இருக்கும்.
அதை விடுத்து தனியார் பல்கலைக்கழகங்களையும், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களையும் அதிக அளவில் துவங்குவது கல்வியை தனியார்மயமாக்கிவிடும், வணிகமயமாக்கிவிடும், கார்ப்பரேட் மயமாக்கிவிடும். ஒன்றிய அரசில் பாஜக நீடிக்கும் இன்றைய நிலைமைகளில் கல்வியை காவி மயமாக்கிவிடும்.
இத்தகையப் போக்கு, அடித்தட்டு மாணவர்களின் நலன்களுக்கு எதிராக அமைந்துவிடும். எனவே, மாணவர்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார்.