சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களைக் கவரும் வகையில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பணப்பட்டுவாடா காரணமாக தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது நடைபெறும் தேர்தலிலும் வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்கள் சார்பில் பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும், வாக்காளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை ரொக்கமும் கொடுக்கப்பட்டு வருகிறது.
வாக்குக்கு பணம் கொடுப்பதும், பணம் பெறுவதும் குற்றம் என விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அத்துடன் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் கூடுதல் பறக்கும் படைகளை அமைத்து கண்காணிக்கவும், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்கும் வகையில் புகார் எண்களை வெளியிடவும் தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்த வேண்டும்.
பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டாலோ ரத்து செய்யப்பட்டாலோ அதுவரை அந்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் செய்த செலவுகளை சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது அக்கட்சித் தலைவரிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும்.
குறிப்பாக தேர்தல் நேரத்து கருப்புப் பண நடமாட்டத்தைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக்கோரியிருந்தார்.
முதல்வர் வாகனம் சோதனை: இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “பறக்கும் படை அதிகாரிகள் முதல்வரின் வாகனத்தையே மறித்து சோதனை நடத்தியுள்ளனர். பணப்பட்டுவாடா நடவடிக்கைகளைத் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு அனைத்து உதவிகளையும், ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது” என்றார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “தேர்தலில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா எனத் தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பரிசுப் பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 169 பறக்கும் படைகளும், 2 ஆயிரத்து 166 கண்காணிப்புக் குழுக்களும் பணியமர்த்தப்பட்டுள்ளன” என விளக்கம் அளித்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தேர்தலை ஜனநாயக வழியில் அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.