தமிழகம்

பிரேமலதா, சவுமியாவின் துல்லிய பேச்சுகள்! - ஆணாதிக்கம் தோய்ந்த அரசியல் களத்தின் புதிய நம்பிக்கையா?

பாரதி ஆனந்த்

தவெக தலைமையில் தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்துள்ளது. திராவிடக் கட்சியல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ள சூழலில், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து கொண்டு தேமுதிக (விருதாச்சலம்) எம்எல்ஏ பிரேமலதாவும், பாமக (தருமபுரி) எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் தங்களது சட்டப்பேரவை பிரவேசத்தின் முதல் நாளில் இருந்தே முன்வைக்கும் துல்லிய பேச்சுகளால் மக்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கின்றனர்.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு 2026 தேர்தலில் 23 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் 12 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். எனவே, ஒப்பீட்டு அளவில் இது கணிசமான ஏற்றம்தான்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றை திருப்பிப் பார்த்தால், 1991-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 32 பெண் எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றதே இதுவரை அதிக எண்ணிக்கையாக இருக்கிறது. அப்போது அவையின் பெண் உறுப்பினர்கள் பலம் 13%.

அதன்பின்னர், 2001-ல் 24 பெண் எம்எல்ஏக்கள் இருந்தனர். பேரவையில் பெண் உறுப்பினர்களின் பலம்10% ஆக இருந்தது. தற்போது 23 பெண் உறுப்பினர்கள் என்பதால் மீண்டும் மொத்த உறுப்பினர்களில் மகளிர் பலம் 10% ஆக இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் பெண் பிரதிநிதிகளின் 3-வது அதிகபட்ச எண்ணிக்கையாக இது அமைகிறது.

33% இட ஒதுக்கீடு பற்றி இன்னும் விவாதங்கள் நடத்தப்பட, கட்டுரைகளும் எழுதப்பட, இதைவிட வேறு என்ன காரணம் இருந்தவிட முடியும் என்பதையே இந்த பிரதிநிதித்துவம் உணர்த்துகிறது.

எண்ணிக்கை அளவில் இலக்கை எட்டாவிட்டாலும் கூட தற்போதைய தமிழகத்தில் 4 பெண் அமைச்சர்கள் இருப்பது பெருமிதம் கொள்ள வேண்டியதே. அதேபோல், 23 எம்எல்ஏக்களில் இரண்டு பெண் எம்எல்ஏக்களின் சட்டப்பேரவை நடவடிக்கைகளின் பங்களிப்பு இன்னும் அதிகமான பெண்களை அரசியல் நோக்கி நகர்த்துவதாகவே இருப்பதாக வரவேற்புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் பிரேமலதா விஜயகாந்தும், சவுமியா அன்புமணியும் ஆணாதிக்கம் தோய்ந்த அரசியல் களத்தின் புதிய நம்பிக்கையாக திகழ்கிறார்களா என்று சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தியாவில் இதுவரை 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்துக்கு பெண் முதல்வர்கள் இருந்திருக்கின்றனர். என்றாலும்கூட சட்டப்பேரவை என்றாலே ஆண் எம்எல்ஏக்களின் குரல்தான் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடியும்.

தமிழகத்தில் தன் கணீர் குரலால், ஆளுமைத் திறனால், கூர்மையான பதில்களால், எதிர்க்கட்சிகளை அதிரவைக்கும் கர்ஜனைகளால் ஜெயலலிதா ஒட்டுமொத்த சட்டப்பேரவையையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் சமீப காலங்களில் தமிழக சட்டப்பேரவையில் அப்படியான பெண் குரலை கேட்க முடியவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்வது போல் பிரேமலதா, சவுமியாவின் இருப்பு அமைந்துள்ளது என்பது மறுப்பதற்கில்லை.

தமிழக சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேசிய பிரேமலதா, முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியது போல் பவர் காட்டினார்.

"மனவேதனையுடன் சொல்கிறேன்... இங்கு குதிரை பேரம் நடந்ததாக பேசப்படுகிறது. அந்த விஷயத்தை பற்றி இந்த சட்டப்பேரவையில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.

பதவி ஏற்ற அன்று நான் யாரையும் முகத்தை மூடிக் கொண்டு சந்திக்க மாட்டேன் என முதல்வர் விஜய் கூறினார். ஆனால், உங்கள் இல்லத்துக்கு முகத்தை மூடிக் கொண்டு வந்து சந்தித்தது யார் என நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது குதிரை பேரம் உண்மை தான் என எண்ணத் தோன்றுகிறது.

உங்கள் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட்டுக்கு அரசு உயர் பதவி கொடுத்துள்ளதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. ஜோதிடருக்கு பதவி கொடுப்பதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என்று கூறியதோடு நம்பிக்கை தீர்மானத்தை தேமுதிக ஆதரிக்கவில்லை என்றார். அன்றைய தினமே ஜோதிடரின் அரசுப் பதவி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.

தொடர்ந்து பாமக சார்பில் சவுமியா அன்புமணி பேசினார். அவருடைய பேச்சின் சாராம்சம் வருமாறு: “சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட தவெகவின் ஏராளமான வாக்குறுதிகள் பாமகவின் வாக்குறுதிகளை ஒட்டியே அமைந்துள்ளன. தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூடியதற்கு நன்றி. ஆனால் ஒரு கடையை மூடினால் , 4 டாஸ்மாக் கடைகள் சந்துகளில் திறக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் பெண்கள் டாஸ்மாக் வழியாகப் பயணிக்க நேரும்போது, தலைகுனிந்து செல்கின்றனர். இப்போதுதான் பெண்கள் பல அடக்குமுறைகளில் இருந்து வெளியே வந்திருக்கின்றனர். மீண்டும் பெண்கள் பின்னோக்கிச் செல்லாமல் இருக்கும் வகையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

சிங்கப்பெண் தடுப்புப் படைகளை உருவாக்கியதற்கு நன்றி. தமிழ்நாட்டின் முன்னேற்றத்தையும் தமிழக மக்களின் நலனையும் கருத்தில்கொண்டு முதல்வர் விஜய் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் விலகி இருக்க பாமக விரும்புகிறது” என்று பேசினார். சவுமியா அன்புமணி பேசுகையில் முதல்வர் விஜய் சில குறிப்புகளை எடுத்தது அன்றைய தினம் வைரலாகியது.

நம்பிக்கை தீர்மானம் மட்டுமல்லாது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரேமலதா, சவுமியா பேசியதும் கவனம் ஈர்த்தது.

ஆளுநர் உரையில் இருந்த உச்சரிப்புப் பிழைகளைக் கூட எண்ணிக்கையுடன் சுட்டிக் காட்டினார் பிரேமலதா. மேகேதாட்டு விவகாரத்தில் பேசுகையில், “அண்டை மாநிலத்தை நம்பியிருப்பதைக் காட்டிலும் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்” என்று யோசனை சொன்னார். கூடவே, “சட்டப்பேரவையில் சில்வர் டம்ளர்களில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வழங்க வேண்டும்” என்று லைட்டர் வெயிட் பகடிக்கும் வழிவகுத்துக் கொடுத்தார் பிரேமலதா.

சட்டப்பேரவையில் உரையாற்றிய பாமக சட்டப்பேரவைக் குழு தலைவர் சவுமியா அன்புமணி, “ஓர் அறையை எந்தப் பொருளை கொண்டு வேண்டுமானாலும் நிரப்பலாம். ஆனால், அந்த அறையில் ஒரு விளக்கை ஏற்றிவைத்தால் போதும், அதன் ஒளியில் அறையே நிரம்பிவிடும். அப்படிப்பட்ட நிகழ்ச்சியையே ஆளுநர் உரையில் நான் பார்த்தேன். சமூக நீதி சர்வே நடத்தப்படும் என்ற அந்த ஒரு வாக்கியம், இந்த சட்டப்பேரவையை மட்டும் ஒளிபெற செய்யவில்லை. தமிழக மக்களின் அனைத்து இல்லங்களிலும் வெளிச்சத்தை கொடுத்தது. 100 ஆண்டுகளுக்கு பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அந்த வாக்கியம் வரலாற்று சிறப்புமிக்கது” என்றதோடு, “தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தருமபுரியில் சிப்காட் அமைக்க வேண்டும்” என தனது தொகுதிக்காகவும் குரல் கொடுத்தார்.

இவ்வாறாக பிரேமலதா விஜயகாந்த், சவுமியா அன்புமணி என இருவருமே தவறுகளை சுட்டிக்காட்டுவது, கோரிக்கைகளை வைப்பது, பாராட்ட வேண்டியவற்றை பாராட்டுவது என்று முழுவீச்சில் செயல்பட்டனர்.

அவர்கள் இருவரின் மொழி நடையும், உடல் மொழியும் தேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் பாங்கோடு இருந்தது.

பிரேமலதா, சவுமியா இருவரும் அரசியலுக்குப் புதிதில்லை என்றாலும் சட்டப்பேரவைக்கு புதிதுதான். தாங்கள் பேசும்போது அது வெறும் பேப்பரில் இருப்பதைப் பார்த்து வாசிப்பதுபோல் அல்லாது இயல்பாகவும், சூழல் அறிந்தும் உரையாற்றிய விதம் அவர்கள் மீது கவனத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை.

அமளி, துமளிகளுக்குப் பெயர்போன சட்டப்பேரவையில் அமைதியாய் அழுத்தமாய் பேசி தங்கள் கோரிக்கைகளை வலிமையாக பதிவு செய்ய முடியும் என்பதை பிரேமலதாவும், சவுமியாவும் நிரூபித்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதேவேளையில் பிரேமலதா தனது கணவர் விஜயகாந்த் தோற்றுவித்த தேமுதிகவை தான் கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறார். சவுமியா தனது மாமனார் ராமதாஸ், கணவர் அன்புமணி வளர்த்தெடுத்த பாமகவுக்காக செயல்படுகிறார். இருவருமே அரசியல் பின்புலத்திலிருந்து வந்தவர்கள்.

உள்ளாட்சி பெண் பிரதிநிதிகள் பலரும் பெயரளவில்தான் பதவியில் இருப்பார்கள் அவர்களை அவர்களது கணவரோ / சகோதரரோ இன்னும்பிற ஆண்கள் தான் இயக்குவார்கள் என்பது அனைவரும் அறிந்த நிஜம்.

தவெகவில் தற்போது 13 பெண் எம்எல்ஏக்கள் உள்ளனர். திரு.வி.க நகர் - பல்லவி, பல்லாவரம் - காமாட்சி, ராணிப்பேட்டை - தாஹிரா, குடியாத்தம் - சிந்து, குமாரபாளையம் - விஜயலட்சுமி, பவானிசாகர் - தமிழ்செல்வி, அவிநாசி - கமலி, திருப்பூர் வடக்கு - சத்தியபாமா, கவுண்டம்பாளையம் - கனிமொழி, கிருஷ்ணராயபுரம் - சத்யா, குழந்தை ராணி - சிவகங்கை, கீர்த்தனா - சிவகாசி, ஜெகதீஸ்வரி - ராஜபாளையம் சட்டப்பேரவையில் உள்ளனர். இவர்களில் பல்லவி கொஞ்சம் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருக்கிறார். பெண் அமைச்சர்களில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மக்களால் அறியப்பட்டிருக்கிறார்.

எஞ்சியவர்கள் சட்டப்பேரவையில் தங்கள் தொகுதி மக்களுக்காக களமாடுவதில்தான், இன்னும் இன்னும் அதிகமான பெண்களை மக்கள் பணி நோக்கி, அரசியல் நோக்கி ஈர்க்கமுடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதுதான் ஆணாதிக்கம் தோய்ந்த அரசியல் களத்தி புதிய நம்பிக்கையாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

நாதக மட்டுமே இதுவரை 33% மகளிர் இட ஒதுக்கீட்டை வேட்பாளர் அறிவிப்பிலேயே பின்பற்றுகிறது. தவெக புதிய அரசியல் சக்தியாக தன்னை முன்னிறுத்தும் வேளையில் அடுத்துவரும் உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல்களில் பெண் வேட்பாளர்களும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT