பிரேமலதா
சென்னை: சட்டப்பேரவை என்பது சட்டப்பேரவையாக நடக்க வேண்டுமே தவிர, சண்டை மன்றமாக நடக்க கூடாது. இதனால் தமிழகத்துக்கு என்ன பயன்?” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக கூறினார்.
சட்டப்பேரவையில் பிரேமலதா இன்று பேசுகையில், “மானிய கோரிக்கையை தவிர மற்ற எல்லாம் நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டையும்தான் சொல்கிறேன். இருவரும் மாறி மாறி குறை சொல்வதால், சட்டப்பேரவை மாலை 6 மணி வரை செல்கிறது. இதனால் மக்களுக்கு என்ன பயன்?
மாணவர்கள் கூட தேர்வுக்கு இவ்வாறு தயாராக மாட்டார்கள். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரவு பகலாக தயாராகி வருகிறார்கள். மக்களுக்காக பேச வேண்டும். வாக்குவாதம் செய்யலாம். ஆனால், 24 மணி நேரமும் சண்டைதான் போடுகிறார்கள்.
சபாநாயகர் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். பேசியவர்களும், சண்டை போட்டவர்களும் தான் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். இதனால் தமிழகத்துக்கு என்ன பயன்?
ஆண்ட கட்சிகள் அவரவர்களால் முடிந்த அளவுக்கு நல்லதுதான் செய்துள்ளனர். தற்போது தவெகவுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். மக்களுக்கு நல்லது நடக்கதான் சட்டப்பேரவை நடக்கிறது. இது மாதிரியான விஷயங்கள் கவலையளிக்கிறது” என்று கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தம்பி ஆதவ் அர்ஜுனா, நீங்கள் எழுந்தால்தான் தான் சண்டையே ஆரம்பம் ஆகிறது. நீங்கள் 8-ஆம் தேதி வரை பேச வேண்டாம் என அவரிடம் நேரடியாகவே சொல்லிட்டேன். நேரம் வீணாகிறது.
உங்களுக்கு தனிப்பட்ட கருந்து இருந்தால், பொதுக் கூட்டத்தில் பேசிக் கொள்ளுங்கள். சட்டப்பேரவையில் பேச வேண்டாம். ஆதவ் அர்ஜுனாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என சபாநாயகரிடம் சொல்லியுள்ளேன். நான் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக பேசவில்லை.
விவாதங்களை நான் ஆதரிக்கிறேன். ஆனால், தொடர்ந்து சண்டை போடுகிறார்கள். எம்எல்ஏக்கள் தங்களது கடமையை செய்ய வந்துள்ளோம். ஆனால், அதைப் பேச முடிவதில்லை. சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சினையை பேச வேண்டும். சட்டப்பேரவை என்பது சட்டப்பேரவையாக நடக்க வேண்டுமே தவிர, சண்டை மன்றமாக நடக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.