கோவை ஈஷாவில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அருகில் ஈஷா நிறுவனர் சத்குரு.
தமிழக தேர்தல் களத்தில் தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்,ஈஷா மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற எஸ்.பி.வேலுமணியும், பிரேமலதாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஈஷா மகா சிவராத்திரி விழா மேடைக்கு அருகே முக்கிய விருந்தினர்கள் அமர்ந்திருந்த வரிசையில் இருவரும் அமர்ந்திருந்தனர். ஈஷா நிறுவனர் சத்குரு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியபோது, பிரேமலதாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் எஸ்.பி.வேலுமணி. இந்த காட்சி திரையில் ஒளிபரப்பானபோதுதான், பிரேமலதாவின் வருகை பொதுவெளியில் தெரியவந்தது.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறியதாவது: மார்ச் 1-ம் தேதி, மதுரையில் நடைபெற உள்ள என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்குள் கூட்டணியை இறுதி செய்து,மற்ற கூட்டணிக் கட்சி தலைவர்களுடன், தேமுதிக தலைவரையும் மேடையில் ஏற்றி விட வேண்டும் என்ற முனைப்புடன் என்.டி.ஏ.வில் தீவிரமாக காய் நகர்த்தல்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற எஸ்.பி.வேலுமணியுடன், தொகுதி பங்கீட்டை இறுதிசெய்யவே பிரேமலதா கோவை வந்துள்ளார். ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட பிரேமலதா இந்த சந்திப்பிற்கு சிவராத்திரியை தேர்வு செய்து வந்திருக்கிறார்.
அவரது பயணத்தின் நோக்கம் வெற்றி அடைந்து விட்டதாகவும், என்.டி.ஏ. கூட்டணியில் தேமுதிகவிற்கான தொகுதிகள் குறித்து பேசி முடிவு எடுக்கப்பட்டு விட்டதாகவே தெரிகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சிவராத்திரி நிகழ்வு முடிந்தபின் ஈஷா மையத்திலேயே நேற்றும் பிரேமலதா தங்கியிருந்தார். அங்கிருந்து வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அவர் சென்று வந்தார் என்றும், அங்கு வேலுமணியைச் சந்தித்து பேசியுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.