விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி.

 
தமிழகம்

செம்மண் குவாரி வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட அனைவரும் விடுவிப்பு

விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

இரா.தினேஷ்குமார்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில், கடந்த திமுக ஆட்சியில் (2006-2011), அப்போதைய உயர் கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்ளிட்டோர் உரிமம் பெற்று செம்மண் வெட்டி எடுத்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 24-06-2011 முதல் 22-09-2011 வரை, அதிகாரிகள் கூட்டு புலக் தணிக்கை செய்துள்ளனர். இதில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் எடுத்து, அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாயை இழப்பை ஏற்படுத்தியதாக அதிமுக ஆட்சியில் குற்றஞ்சாட்டப்பட்டன.

          

இது குறித்து அப்போதைய வானூர் வட்டாட்சியர் குமாரபாலன் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகனான முன்னாள் எம்.பி கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 23-09-2012-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை மீதான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. உடல் நலக்குறைவால் லோகநாதன் உயிரிழந்துவிட்டார். அரசு தரப்பில் சேர்க்கப்பட்ட 57 சாட்சிகளில் 33 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர்.

இந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பு இன்று (ஏப்.2) அளிக்கப்பட்டன. இதில் அரசு தரப்பில் குற்றத்தை நிரூப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டி, வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து, நீதிபதி மணிமொழி தீர்ப்பு வழங்கினார்.

பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் கூறும்போது, “அரசு தரப்புக்கு சாதகமாக எந்தவொரு ஆவணத்தையும் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அவர்கள் தாக்கல் செய்திருந்த ஆவணங்களும் அரசு சாதகமாக இல்லை. பட்டா இடத்தில் உரிமம் பெற்று செம்மண் குவாரி நடத்தியதால், இதனை திருட்டு என கூற முடியாது. அதிகாரிகளின் கூட்டு புல தணிக்கை அறிக்கையிலும் முகாந்திரம் இல்லை என தெரிவித்து அனைவரையும் நீதிபதி விடுதலை செய்துள்ளார்” என்றனர்.

தீர்ப்பு குறித்து பொன்முடி கூறும்போது, “2006 – 2011-ம் ஆண்டு திமுக ஆட்சியில், நான் அமைச்சராக இருந்தபோது, குவாரியில் நான் தவறு செய்ததாக கூறி, அதிமுக ஆட்சியில் பழிவாங்கும் நோக்கத்தில் கடந்த 2012-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகும், வழக்கை தொடர்ந்து நடத்தி, வழக்கறிஞர்கள் மூலமாக உண்மையை எடுத்து கூறினோம். பொய் வழக்கு என நிரூபிக்கப்பட்டுள்ளது.

என் மீதும், எனது மகன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளோம்.

பொய் வழக்கின் மூலம் திமுகவை முடக்கிவிட வேண்டும் என்ற அவர்களது எண்ணம் தோல்வி அடைந்துவிட்டது. இந்த தீர்ப்பானது கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் கட்சியினருக்கு கிடைக்க வெற்றி. பொய் வழக்கு எடுபடாது என்பதற்கு, இந்த வழக்கு உதாரணம்” என்றார்.

SCROLL FOR NEXT