தமிழர்களையும் இசையையும் பிரிக்க முடியாது. சுதந்திர போராட்டம் முதற்கொண்டு வீரத்தை ஊட்டவும், எழுச்சியை உருவாக்கவும் பாடல்கள் பாடப்பட்டன. அந்தவகையில், தேர்தல் காலத்தில் வாக்காளர்களை ஈர்க்கும் முக்கிய கருவியாக தேர்தல் பிரச்சார பாடல்கள் இருக்கின்றன.
இந்த பாடல்களை உருவாக்க பல்வேறு கட்சிகளும் தனியாக ஒரு குழுவையே உருவாக்கி, பெரும் செலவில் பாடல்களை வடிவமைக்கின்றனர். அதில், தங்கள் கட்சியின் கொள்கைகள், மக்கள் நல திட்டங்கள், தலைவர்கள் குறித்த கருத்தை, மக்கள் விரும்பும் எளிய இசையில் உருவாக்குகின்றனர். அதன்படி, திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களுக்கென்று தனித்தனியாக பாடல்களை வெளியிட்டு, தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்கள், பொதுக் கூட்டங்கள், தங்கள் கட்சி யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
திமுக சார்பில் கடந்த தேர்தலின்போது, ‘ஸ்டாலின்தான் வராரு.. விடியல் தர போறாரு..’ என்ற பிரச்சார பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி வரவேற்பை பெற்றது. இந்த முறை ‘ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற ராப் இசை கலந்த பாடலை திமுக வெளியிட்டுள்ளது. ‘ஸ்டாலின் தான் வராரு...’ பாடல் அளவுக்கு இன்னும் இந்தப் பாடல் பிரபலமாகாத நிலையில், அந்த பாடலை சமூக வலைதளங்களில் ‘பெய்டு புரோமோஷனாக’ செய்யும் முயற்சியில் திமுக ஐ.டி விங் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதிமுக பிரச்சாரங்களில் எம்ஜிஆர் நடித்த படங்களின் பாடல்கள், ஜெயலலிதா பாடல்கள், இரட்டை இலை சின்னம் குறித்த பாடல்கள் ஒலிக்கவிடப்படுகின்றன. அத்துடன் இந்த தேர்தலுக்காக ‘விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப விரைந்து வருகிறார் எடப்பாடியார்..’ என்ற பாடலையும், திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை குறிப்பிட்டு ‘காது குத்து...’ என்ற பாடலையும் அதிமுக ஐ.டி விங் நிர்வாகிகள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தமிழர் அடையாளம், உரிமை, மொழி, நிலம், இனம் என உணர்ச்சிமிக்க வரிகளுடன் நாம் தமிழர் கட்சியும் பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளது. ‘என்னம்மா தேவி ஜக்கம்மா.. நாடு நாசமா போகுதே நியாயமா’ என தனது பங்குக்கு தொண்டர்களை உசுப்பேற்றி வருகிறார்கள் அந்த கட்சியின் தம்பிகள்.
தவெக தரப்பிலோ ‘தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பிறக்குது’ கொடி பாடலையும், ‘உங்க விஜய் நான் வரேன்..’ என அக்கட்சியின் தலைவர் விஜய் தனது சொந்த குரலில் பாடிய பாடலையும் ட்ரெண்ட் ஆக்கினார்கள் தவெக சமூக வலைதளக் குழுவினர். மேலும், கல்லூரி நிகழ்ச்சி, திருவிழா என தவெக கட்சி பாடல்களை இளம் பட்டாளம் கொண்டாடி வருகிறது.
இதுதவிர தேமுதிகவினர் விஜய்காந்த் பாடல்களையும், கம்யூனிஸ்ட் கட்சிகள் நாட்டுப்புற பாடல்களை மக்கள் பிரச்சினை கருத்துகளை புகுத்தி, தங்கள் பாணியில் தயாரித்த பாடல்களையும் பிரச்சார களத்தில் பயன்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் காலங்காலமாக தேர்தலில் வெற்றிபெற வாக்கு சேகரிப்பு, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு எப்படியோ, அதுபோல கட்சிகளின் பாடல்கள் என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் கருவியாக உள்ளது நிதர்சனம்.