சென்னை: நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டிஉள்ளனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: நாங்குநேரியில் மர்ம கும்பல் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்திருப்பதும், 5 பேர் படுகாயம் அடைந் திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவு சீர்குலைந்துள்ளது என்பதை இச்சம்பவமே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: நாங்குநேரி காட்சிகளை காணவே பதைக்கின்றன. திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவது போல விளம்பரம் செய்கின்றனர். ஆனால், உண்மையில் ரத்த ஆறுதான்ஓடுகிறது. பாதுகாப்பு உணர்வை மக்களிடையே உறுதி செய்ய முடியாத இந்த அரசு இருந்து என்ன பயன். சமூக மோதல்களை தடுக்க முடியாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கஞ்சா புழக்கம் அதிகரித்து, இளைஞர்களின் வாழ்வை சீரழிப்பதோடு, பொதுமக்களின் பாதுகாப்பையும் சிதைத்து, திறனற்ற நிர்வாகத்தால் எங்கு பார்த்தாலும் கஞ்சா மயமாக்கி, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையும், மக்கள் நலனையும் ஒருசேர கொன்றுவிட்டு, ‘வெல்வோம் ஒன்றாக’ என்று திமுக அரசு சூளுரைப்பது வெட்கக்கேடானது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டைக் கொலை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். இனி வரும் காலங்களில் காவல்துறை மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் கஞ்சா தடையின்றி கிடைப்பது தான் இத்தகைய கொலைவெறி தாக்குதல்கள் நடப்பதற்கு காரணம். இதற்காக திமுக அரசு வெட்கித்தலைகுனிய வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: தென் மாவட்டங்களில் சாதியின் பெயரில் வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கின்றனர். அதன் ஒத்திகையே இந்த செயல் எனத் தோன்றுகிறது. இதன் பின்னணியை முழுமையாக ஆய்ந்தரிய வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் தொடர்வது மக்களுக்கு பாதுகாப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசு இந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து உரிய தண்டனையை காலம் தாழ்த்தாமல் கொடுக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசு, அதை திசை திருப்பும் நோக்கில் உதவித்தொகை கொடுத்து மக்களை சரிகட்ட நினைக்கிறது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தமிழகத்தில் கட்டுக்கடங்காது நடைபெறும் போதைப்பொருட்கள் விற்பனையும், அதனால் நடக்கும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் அலட்சியத்தால் இன்னும் எத்தனை உயிர்கள் பலி கொள்ளப்போகிறதோ?
தவெக தலைவர் விஜய்: உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே, நம்பர்-1 மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு லட்சணம் இதுதானா, மக்களின் பாதுகாப்பை துளியும் யோசிக்காத திமுக ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி.
பாமக நிறுவனர் ராமதாஸ்: நாங்குநேரில் நடந்த சம்பவத்துக்கு, கஞ்சா போதையால் ஏற்பட்ட ஆவேசம்தான் காரணமாக இருக்க முடியும். தடையின்றி கஞ்சா கிடைப்பதை தடுக்க இயலாத இந்த அரசு அனைத்துத் தரப்பு மக்களையும் ஏமாற்றி தேர்தலில் வெற்றிபெற, மறைமுகமாக வாக்குக்கு பணம்கொடுத்து வருவது கண்டிக்கதக்கது. இதேபோல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.