தமிழகத்தில் ஏப்ரல் 2-ல் காலியாகவிருக்கும் 6 ராஜ்ய சபா இடங்களில் இலைக் கட்சிக்கு இரண்டு இடங்கள் உறுதியாகக் கிடைக்கும். ஆனால், “அந்த இரண்டு இடங்களையும் என்னைக் கேட்காமல் யாருக்கும் உறுதி கொடுக்க வேண்டாம்” என ‘அன்புக் கட்டளை’ போட்டு வைத்திருக்கிறாராம் டெல்லி ‘உள்துறை’ தலைவர்.
குக்கர் தலைவரை கூட்டணிக்குள் கொண்டு வந்தபோதே, “உங்களை மத்திய அமைச்சர் ஆக்கவும் எங்களால் முடியும். அதனால் பழசை எல்லாம் கிளறிக் கொண்டிருக்காமல் முதலில் கூட்டணிக்குள் வந்துவிடுங்கள்” என்று சொன்னாராம் ‘உள்துறை’ தலைவர்.
அதனால், முந்தைய பேச்சுகளை எல்லாம் மறந்துவிட்டு, ‘பங்காளியாய்’ எடக்கானவருடன் கைகுலுக்கினாராம் குக்கர் தலைவர். அதிமுக தயவில் வாசனைத் தலைவரை டெல்லிக்கு அழைத்துக் கொண்டது போல் தன்னையும் டெல்லிக்கு இழுத்து அமைச்சரவையில் உட்காரவைப்பார்கள் என்ற பெருத்த நம்பிக்கையில் இருக்கிறாராம் குக்கர் தலைவர்.
அதனால் தான், “சட்டப் பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” என்ற கருத்தை முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருக்கிறாராம். தனக்குப் பதிலாக தனது துணைவியாரை ஆண்டிபட்டி அல்லது டெல்டா மாவட்டத்தில் ஒரு தொகுதியில் நிறுத்துவதாக இருந்த தனது முடிவையும் இப்போது ஒத்திவைத்திருக்கிறாராம்.