தமிழகம்

கீதையின் நாயகனை உசுப்பும் விசில் பார்ட்டி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

அண்மையில் ‘விசில்’ வீட்டில் குடியேறிய இலைக் கட்சியின் கீதையின் நாயகன், ‘கோட்டை’ மாவட்டத்தில் இருக்கும் ‘குடி’ தொகுதியை மனதில் வைத்தே ஜாகை மாறினாராம். ஏற்கெனவே இந்தத் தொகுதி யில் போட்டியிட்டு தனது சாதி சனத்தின் ஆதரவில் வெற்றிபெற்றவர்.

அந்த கணக்கில் இப்போதும் அங்கே களமிறங்க நினைக்கிறாராம். ஆனால், விசில் பார்ட்டி தலைமையோ அவரை மலைக்கோட்டை மாநகரில் இருக்கும் ‘அரங்கம்’ தொகுதியில் போட்டியிடச் சொல்கிறதாம். கீதையின் நாயகன் ஏற்கெனவே இங்கு நின்று வென்றுதான் ‘மாண்புமிகு மகுடம்’ சூடிக் கொண்டார்.

          

இதுவும் தனது சாதி சனம் கணிசமாக இருக்கும் தொகுதிதான் என்றாலும் கீதையின் நாயகனுக்கு இங்கே போட்டியிடுவதில் இன்னொரு சிக்கல் இருக்கிறதாம். ‘அரங்கம்’ தொகுதியில் இலைக் கட்சி சார்பில் போட்டியிட தனது நெருங்கிய சொந்தமான ‘ஜோதி’யானவர் விருப்ப மனு கொடுத்திருக்கிறாராம். இவரும் இலைக் கட்சி மாண்புமிகுவாக இருந்தவர் தான் என்பதால் சொந்தத்துக்குள் மோதிக் கொள்ள வேண்டாமே என சொந்தமாக ஒரு கணக்குப் போடுகிறாராம் கீதையின் நாயகன்.

இருவரில் யார் வென்றாலும் அமைச்சராகும் ’கணிப்பு’ இருப்பதால் ஒரே தொகுதியில் இருவரும் நிற்க வேண்டாமே என இருவரும் பேசிவைத்திருக்கிறார்களாம். ஆனாலும், “காவிக் கலர் தூக்கலாய் தெரியும் ‘அரங்கம்’ தொகுதியில் நீங்கள் நின்றால் தான் சமாளிக்க முடியும்” என்று கீதையின் நாயகனை ‘உள்ளடி’ மேட்டர் தெரியாமல் உசுப்பி வருகிறதாம் விசில் பார்ட்டி.

SCROLL FOR NEXT