தமிழகம்

‘சமுத்திர’ ஊர் தொகுதி யாருக்கு? | உள்குத்து உளவாளி!

செய்திப்பிரிவு

ஊரின் பெயரிலேயே சமுத்திரத்தை அடக்கி வைத்திருக்கும் மாநகரத்தின் ‘வணக்கத்துக்குரியவராக’ இருக்கும் ‘சுந்தரமான’ பெண்மணி அவர். இவரது ‘கிங்’ கணவர் தான் அங்கே அதிகாரக் கட்சியின் மாநகர் முதல்வராக இருக்கிறார்.

இந்தத் தொகுதியின் சிட்டிங் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ‘சபரி’ கடவுளானவருக்கும் மாவட்டத்தின் ’மணக்கும்’ மாண்புமிகுவுக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் இம்முறை அவருக்கு ‘சமுத்திர’ ஊர் தொகுதி கிடைப்பது சிரமம் என்கிறார்கள். ‘மணக்கும்’ மாண்புமிகுவின் வாரிசும் ‘வணக்கத்துக்குரியவரின்’ ‘கிங்’ கணவரும் நகமும் சதையும் போல் இருக்கிறார்கள்.

அந்த நெருக்கத்தை வைத்து இம்முறை ‘சமுத்திர’ ஊர் தொகுதியை பிடிக்க பிளான் போடுகிறாராம் திருவாளர் ‘கிங்’. இதற்கு அச்சாரமாக, அண்மையில் தங்கள் ஊருக்கு அரசு நிகழ்ச்சிக்காக வந்திருந்த ‘மணக்கும்’ மாண்புமிகுவுக்கும், மண்டலத்தை கவனிக்கும் இரண்டெழுத்து பொறுப்பு அமைச்சருக்கும் தலா பத்து சவரன் பொன்னில் செயின் போட்டு சிறப்பித்தாராம் மிஸ்டர் ‘கிங்’.

இதை பொது மேடையிலேயே போட்டு பந்தா காட்ட நினைத்திருந்தாராம். ஆனால், தேவையற்ற சர்ச்சைகளை உண்டாக்கலாம் என கடைசி நேரத்தில் யாரோ ‘கண்ணைக் காட்டியதால்’ அந்த முடிவை மாற்றிக் கொண்டவர், ‘மாண்புமிகுக்கள்’ தங்கி இருந்த இடத்துக்கே போய் அவர்களின் மனங்குளிர அணிவித்துவிட்டு வந்தாராம்.

SCROLL FOR NEXT