‘அம்மா’ காலத்தில், தூங்கா நகரத்தைவிட மலைக்கோட்டை மாநகரத்தில் இலைக் கட்சி துடிப்பாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ் என்கிறார்கள். பொறுப்பில் இருந்தவர்கள் பனையூர் பக்கம் போய்விட்டதால் மலைக்கோட்டை மாநகர இலைக் கட்சி மாலுமி இல்லாத கப்பலைப் போல் ஆகிவிட்டது.
தங்களுக்கு மாவட்டச் செயலாளர் ஆகும் பாக்கியம் கிட்டுமா என ஒரு காலத்தில் ஏங்கியவர்கள் எல்லாம் இப்போது “எங்களால கட்டி இழுக்க முடியாது சாமி” என்று சொல்லி ஒதுங்குகிறார்களாம். என்னடா இலைக்கு வந்த இழுக்கு என நினைத்த எடக்கானவர், முன்னாள் ஆவின் புள்ளியை மாநகர் மாவட்ட பொறுப்பில் இழுத்துப் பிடித்து உட்கார வைத்திருக்கிறார்.
ஆனால், ‘ஆவின்’ அண்ணாச்சிக்கு எதிராக பலரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்களாம். புரணியுடன் வந்து தன்னிடம் பரணி பாடுகிறவர்களிடம், “அவரு தான் கைக்காசை செலவு செஞ்சு கட்சி நடத்திட்டு இருக்காரு. அவரும் சரியில்லைன்னு சொன்னா, செலவு செஞ்சு கட்சிய வளக்குற அளவுக்கு ஒரு வெயிட்டான ஆளை கூட்டிட்டு வாங்க” என்று மடக்குகிறாராம் மிஸ்டர் எடக்கு.
இந்த நிலையில், “கட்சிக்காக 33 வருசம் மாடா உழைச்சிருக்கேன். அப்படிப்பட்ட நான், சின்னப் பையனுக்கிட்ட எல்லாம் கைகட்டி நிக்கணும்னு தலையெழுத்து இல்லை” என்று சொல்லி அண்மையில், சாஸ்தா கடவுள் பெயர் கொண்ட அவைப்புள்ளி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டாராம்.