‘2009 மக்களவைத் தேர்தல் சமயத்தில் ‘சீமை’ தொகுதியில் போட்டியிட்ட சீமானுக்காக அவரது கட்சியினர் ‘குடி’ பகுதியில் கோயில் ஒன்றில் வைத்து ‘பட்டுவாடா’ செய்து கொண்டிருந்த போது இலைக் கட்சி ‘ராஜ’ வேட்பாளரின் ஆட்கள் கோயில் கதவை இழுத்துப் பூட்டி அவர்களை சிறை வைத்துவிட்டார்கள். துரிதமாக செயல்பட்ட கதர் கட்சி பொறுப்பாளரான ‘முன்னாள் நேவல் அதிகாரி’ ஒருவர், கோயில் கதவை உடைத்து, உள்ளே இருந்த ‘பட்டுவாடா புலிகளை’ காரில் அள்ளிப் போட்டுக் கொண்டு பறந்தார். விடாது துரத்தியது இலைக் கோஷ்டி. அப்போது, ‘சீமானின் சீமந்த புத்திரர், ‘நேவல் அதிகாரிக்கு’ போன் போட்டு, எஸ்கேப் ஆக விதவிதமாக ஐடியா கொடுத்துக் கொண்டே இருந்தாராம்.
இதனால் கடுப்பான மிஸ்டர் ‘நேவல்’, “நீ போனை வெச்சுட்டு போப்பா. இவங்கள காப்பாத்த எனக்கு தெரியும்” என்று தடதடத்தாராம். ‘சீமான்’ தேர்தலில் வென்று மாண்புமிகுவானார். அடுத்த சில நாட்களில் ‘நேவல்’ தனது டாக்டர் மகனுக்கு திருமணம் நிச்சயித்தார். ‘மாண்புமிகு’ சீமானின் தலைமையில் திருமணத்தை நடத்த தடபுடலாக ஏற்பாடு செய்தார்.
ஆனால், என்ன ‘காரணத்தாலோ’ தந்தை, மகன் இருவருமே திருமணத்துக்கு வரவில்லை. இதனால் ரொம்பவே அப்செட் ஆன ‘நேவல்’, அந்த வருத்தத்திலேயே ‘சைக்கிள்’ கட்சிக்கு சைடு மாறினார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சீமானின் சொந்த ஊரான ‘குடி’ தொகுதியில் ‘நேவலின்’ டாக்டர் மகன்தான் விசில் பார்ட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ‘நேவலின்’ மகனுக்கு அமைச்சரவையிலும் இடம் கிடைத்துவிட்டது. பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி பேசும் கதர் பார்ட்டிகள், ‘‘அன்றைக்கு இவரது திருமணத்துக்கு வராமல் அப்பாவும் பிள்ளையும் புறக்கணித்தார்கள்.
இப்போது ‘நேவலின்’ மகன் அரசு நிகழ்ச்சிகளுக்கு வந்தால் அப்பாவும் பிள்ளையும் அமைச்சர் என்ற முறையில் அவருக்கு கட்டாயம் எழுந்து நின்று கைகூப்ப வேண்டும் பாருங்க” என்கிறார்கள்.
இதற்கு நடுவில், அண்மையில் தனது மாவட்டத்தில் கட்சியினரை கூட்டி வைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்திய சீமானின் மகன், “உங்க வீட்டு கல்யாணம், காதுகுத்து நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் அமைச்சர்னு அவரு பெயரை பத்திரிகையில போட்டீங்கன்னா நான் வரமாட்டேன் பாத்துக்குங்க” என்று வார்னிங் கொடுத்தாராம்.