‘மலர்ச்சி’ கட்சியின் இரண்டு எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய வைக்க விசில் பார்ட்டியின் ‘குலுக்கல் மாப்பிள்ளை’ ரொம்பவே மெனக்கிடுகிறாராம். எம்எல்ஏ-க்கள் பயிற்சி வகுப்புக்கு சமுகமளித்திருந்த அந்த இரண்டு எம்எல்ஏ-க்களையும் தனியாக சந்தித்துப் பேசிய திருவாளர் ‘மாப்பிள்ளை’, “ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிடுங்கள். எவ்வளவு செல்வானாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று உத்தரவாதம் அளித்தாராம். இதையடுத்து அவர்கள் இருவரும் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யும் முடிவுக்கு கிட்டத்தட்ட வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அதேசமயம், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை ‘மலர்ச்சி’ தலைவருக்கு கேட்டுப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக ஒரு செய்தி கசிகிறது. இதற்கு மத்தியில் தான், பாராளுமன்றத்தில் 30 ஆண்டுகள் தான் முழங்கியதை எல்லாம் நூலாக தொகுத்திருக்கும் ‘மலர்ச்சி’ தலைவர், டெல்லியில் அதன் வெளியீட்டு விழாவை வைத்து அதற்காக முதன்மையானவரையும் அழைத்திருக்கிறார்.
இதுகுறித்து விமர்சனங்களை எடுத்து வைக்கும் சூரியக் கட்சி சூரர்கள், “30 ஆண்டுகளும் சூரியக் கட்சி பிரதிநிதியாகத் தான் பாராளுமன்றத்தில் முழங்கினோம் என்பதையும் ‘மலர்ச்சி’ தலைவர் மறக்காமல் இருந்தால் சரிதான்” என்று ‘பிட்’டைப் போடுகிறார்கள்.