‘இலைக் கட்சியின் முன்னாள் மாண்புமிகுவான பெருமானுக்கு ‘பதியானவர்’ அண்மையில் கூட்டத்துடன் கூட்டமாய் பனையூர் பிரவேசம் செய்தார். இந்தத் தேர்தலில் அவருக்கு, எடக்கானவர் சீட் தரவில்லை என்றாலும் குலுக்கல் அதிபரின் மனைவி களம் கண்ட ‘குடி’ தொகுதிக்கு அவரை தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார்.
தேர்தல் சமயத்தில் ‘லட்சுமிகடாட்சமாக’ விளங்கிய அந்தத் தொகுதியில் தன் பங்கிற்கும் தேவையானதை ’தேற்றிக்’ கொண்டாராம் ‘பதியானவர்’. தேர்தலுக்குத் தேர்தல் இது அவருக்கு பழகிப்போன சமாச்சாரம் என்றாலும் இம்முறை ‘வழியில் வந்த ஸ்ரீதேவி’ கணக்காய் வளம் கொழித்துவிட்டாராம்.
இந்த நிலையில், முதல் நாள், ‘குடி’ தொகுதியில் குலுக்கல் அதிபரின் மனைவியுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்துவைத்த திருவாளர் ‘பதியானவர்’, மறு நாளே பனையூர் பயணம் மேற்கொண்டதை வைத்து பலவாறு கிசுகிசுக்கிறார்கள். குலுக்கல் ‘அம்மணி’ தான் குறுக்கு வழியில் யோசித்து ‘மாப்பிள்ளை’ கட்சிக்கு அவரை மனம்மாற்றி அனுப்பிவைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
இதற்கு நடுவே, ‘விட்டது போ’ என்ற கதையாக ‘பதியானவர்’ பனையூர் பக்கம் போன தினத்தில் அவரது சொந்த ஊரான ‘சிறி’ தொகுதிப் பக்கம் இலைக் கட்சிக்காரர்கள் வெடிப் போட்டு இனிப்புகள் வழங்கி தங்களது நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.