‘அவார்டு நகர்’ மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் இலைக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் மாண்புமிகு ’பாண்டியப்’ புள்ளி தீவிரமாக முயற்சி செய்தார். ஆனால், அவரது வருகையை விரும்பாத அதே மாவட்டத்தின் ’அதிரடி’ முன்னாள் மாண்புமிகுவானவர் ‘இன்ஸ்டன்டாக’ பட்டாசு கம்பெனி நடத்தும் ‘முதன்மைக் கடவுள்’ புள்ளியைக் கொண்டு போய் எடக்கானவரிடம் நிறுத்தி, “இவருக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும்” என்று சொன்னாராம். இதற்காக பட்டாசு அதிபரிடம் தனக்கான ‘பெருந்தொகையை’ தனியாக வசூலித்துக் கொண்டாராம் மிஸ்டர் ‘அதிரடி’.
ஆனால், எதிர்பாராத திருப்பமாக அப்போது ‘அவார்டு நகர்’ தொகுதியானது கூட்டணியில் இருந்த ‘முரசு’ கட்சிக்குப் போய்விட்டது. இருந்த போதும், ‘வசூலித்த’ பணத்துக்கு வஞ்சகம் பண்ண விரும்பாத மிஸ்டர் ‘அதிரடி’, “அசெம்ளி எலெக்ஷன்ல அவார்டு நகர்’ தொகுதி உங்களுக்குத்தான்” என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம்.
அதன்படியே, எடக்கானவர் முதல் சுற்று பிரச்சாரம் வந்த போது, பட்டாசு அதிபரின் வீட்டில் அவரைத் தங்கவைத்து அப்போதே ’பேசவேண்டியதைப்’ பேசிவிட்டாராம். இதையடுத்து, இப்போதைய வேட்பாளர் பட்டியலில் ‘அவார்டு நகர்’ தொகுதி ‘முதன்மைக் கடவுளின்’ பெயர் கொண்ட பட்டாசு அதிபரே இடம்பிடித்திருக்கிறார்.