தன்னை உதாசீனப்படுத்திய தனது வாரிசு அங்கே இருந்தாலும் இலைக் கூட்டணியில் இடம்பிடிக்க இன்னமும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறாராம் ‘கார்டன்’ தலைவர். ‘பழத்துக்கு’ ஒதுக்கும் சீட்டில் 5 சீட்களை தனது மகள் உள்ளிட்ட தனது விசுவாசிகள் 5 பேருக்காகத் தரவேண்டும் என்கிறாராம் ‘கார்டன்’ தலைவர்.
ஆனால், அவரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள சம்மதித்தாலும், ‘கார்டன்’ தலைவர் சுட்டிக் கேட்கும் ’பெல்’ மற்றும் ‘மகிமை’ எம்எல்ஏ-க்களுக்கு கட்டாயம் சீட் தரமுடியாது என மல்லுக்கு நிற்கிறாராம் வாரிசு.
அதேபோல் “இவருக்கு சீட் குடுத்தீங்கன்னா... ஜெயிச்சதும் சூரியக் கட்சி பக்கம் போயிடுவார்” என தனது சகோதரி மீதும் சந்தடிச் சாக்கில் சாட்டையை வீசுகிறாராம். அதேசமயம், தான் சொல்பவர்களுக்கு சீட் தரமறுத்தால் மருமகள் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்து மகளை நிறுத்துவேன்” என்று கொஞ்சம் திடமாகவே பேசி வருகிறாராம் ’கார்டன்’ தலைவர்.
ஆனால், “அப்பாவும் பிள்ளையும் சேர்ந்திருந்தால் தான் செல்வாக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என இலைக் கட்சி தலைமையும் மலர்க்கட்சி தலைமையும் விடாமல் வலியுறுத்தி வருகிறதாம். இதனிடையே, வழக்கமாக தேர்தல் சமயத்தில் ‘திரள் நிதி’ கொடுத்து உதவும் சாதி சனத்து விஐபி-க்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இப்போது, அப்பாவுக்கும் பிள்ளைக்குமே, “அப்புறம் பார்க்கலாம்” என்கிறார்களாம்.