திமுகவுடன் கூட்டணிக்கு ராமதாஸ் தலைமையிலான பாமக வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இந்த முறை கூடுதல் இடங்களில் போட்டியிட திமுகவிடம் கேட்க இருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சியின் கட்டமைப்புப் பணிகளுக்காக தென் மாவட்டங்களில் ஒரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். திமுக தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. எனது திட்டமிட்ட பயணங்கள் முடிவடைந்த பிறகு, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
மக்கள் மிகவும் கவனமாக வாக்களிக்க வேண்டும். பாஜக 10 ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். திமுக கூட்டணியோடு ராமதாஸ் தலைமையிலான பாமக வருவதற்கு வாய்ப்புகள் இதுவரை தென்படவில்லை. இந்த முறை திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரமும் மரியாதையும் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை திமுக கூட்டணியில் கேட்க இருக்கிறோம். அனைத்து இடங்களிலும் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு எங்கள் கட்சியின் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.