அன்புமணி ராமதாஸ்
புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக கட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் பாமகவுக்கு ஒரு சீட் கூட ஒதுக்கவில்லை. அதிருப்தியடைந்த புதுவை பாமகவினர், கட்சி மேலிடத்தில் பேசி, 19 தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததோடு வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிக்க பாமக முடிவு செய்துள்ளது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய பணியாற்றும்படி புதுவை நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்புமணியின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுவை பாமகவினரும், சொந்த கட்சி வேட்பாளர்களுக்கான பிரச்சாரத்தை கைவிட்டு விட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.