அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று சந்தித்துப் பேசினார். உடன் அதிமுக - பாஜக நிர்வாகிகள்.
தேச விரோத கருத்துக்களை தெரிவிக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, பசுமைவழிச்சாலையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் இல்லத்துக்கு நேற்று காலை தமிழக பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வருகை தந்தனர். அனைவருக்கும் பழனிசாமி காலை விருந்தளித்து உபசரித்தார்.
பின்னர் இருவரும் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “எங்கள் கூட்டணியின் தலைவர் பழனிசாமி வீட்டு விருந்தில் பங்கேற்றது பெருமையாக இருக்கிறது. பழனிசாமி எனது பழைய நண்பர். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், ஊழல் மிகுந்த, முன்னேற்றத்துக்குத் தடையான, செயலற்ற திமுக அரசை தேசிய ஜனநாயகக் கூட்டணி முற்றிலுமாக தூக்கி எறியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
திமுக இந்த தேர்தலில் தோல்வியடையப் போகிறது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் குடும்ப ஆட்சியையும், ஊழலையும் தவிர மக்களின் நன்மைக்காக திமுக எதையும் செய்யவில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஊழலும், வளர்ச்சிக்குத் தடையான செயல்பாடுகளும்தான் இந்த ஆட்சியின் அடையாளமாக இருக்கிறது.
தேசவிரோத கருத்துகளை தெரிவிக்கும் உதயநிதி ஸ்டாலினை நாங்கள் முழுவதுமாக எதிர்க்கிறோம். உதயநிதியின் வெறுப்புப் பேச்சு குறித்து உயர் நீதி மன்றம் நேற்று அதிருப்தி தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அவரது வெறுப்புகளை தூண்டும் பேச்சுக்காகவும், தமிழக மக்களை பிரிக்கும் வகையில் பேசியதற்காகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை பிரதமர் தமிழகம் வருவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்றார்.
இதையடுத்துப் பேசிய பழனிசாமி, “இன்றைய தினம் பியூஷ் கோயல் வருகை மகிழ்ச்சி தருகிறது. அவரோடு பாஜக பொறுப்பாளர்கள், அதிமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது, நாளை (ஜன.23) நடைபெறும் பிரதமர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நாளை நடக்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். இந்தத் தொடக்கம் கூட்டணி வெற்றிக்கு அச்சாணியாக அமையும்.
இன்று தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, சிறுமிகளுக்கும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. எல்லா துறையிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. எல்லா துறைகளிலும் ஊழல். ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்திருக்கிறோம்.
எங்கள் கூட்டணி வலிமையானது. பாரதப் பிரதமர் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்ல, மேட் இன் இந்தியாவை நடைமுறைப்படுத்தி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் அமையும். இதனால் இதுவரை இல்லாத அளவில் வளர்ச்சியை, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதன் மூலம் வழங்குவோம்” என்றார்.
இந்த சந்திப்பின்போது, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.