கோவை: கடந்த மூன்றரை ஆண்டுகளில் 9 வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். கோவையில் தொழில் துறை அமைப்பினர், இளம் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்பேசியதாவது: ஒருங்கிணைந்த இந்தியாவின் வளர்ச்சியை பிரதமர் மோடி முன்னெடுக்கிறார்.
கோவையை எப்போதும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமாகவே கருதுகிறார். குறிப்பாக, பொறியியல் மற்றும் ஜவுளித் துறையில் கோவையின் பாரம்பரியமான பலத்துடன், தற்போது பாதுகாப்புத் துறை, விண்வெளி ஆராய்ச்சி மற்றும் புதிய தலைமுறை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் இணைந்து நகரை வளர்த்து வருகின்றன.
கோவையின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் 15 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இத்த கைய நிறுவனங்களின் துணிச்சலான முதலீடும், புதிய கண்டுபிடிப்புகளுமே உலக அரங்கில் இந்தியாவை நிலைநிறுத்துகிறது.
நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு முந்தைய மின் தட்டுப்பாடுகள் தற்போது களையப்பட்டுள்ளன. தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தேசிய மின் தொகுப்பு வழியாக மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
‘டிஜிட்டல் மயமாக்கல்’ இந்தியாவின் பெரிய புரட்சி. கிராமங்களில் கூட குறைவான விலையில் 5 ஜி சேவை கிடைக்கிறது. இணையச் சேவையை இந்தியாவில் பல கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். சாட் ஜிபிடி பயன்படுத்துதலில் உலக நாடுகளில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. பல்வேறு வரி குளறுபடிகளுக்கு மத்தியில் ஜிஎஸ்டி தீர்வாக அமைந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் தொழில் விரிவாக்கத்துக்கு பயன்படும்வகையில் 9 வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இந்தியரும் நேர்மையான, பொறுப்புணர்வு உள்ள அரசை எதிர்பார்க்கிறார்கள். 23-ம் தேதி நடைபெறும் தேர்தலில், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் வளர்ச்சிக்கான அரசை தேர்வு செய்ய வேண்டும்.
சுதந்திரமான, மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக உள்ளாட்சி வரை பயன்படுத்தி 2047-ம் ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பங்களிப்பில் தமிழ்நாடும் இடம்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தொழில்துறையினர் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பல்வேறு தொழில் அமைப்புகளின் 40 கேள்விகள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் பெற்றுக்கொண்டார். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் தெளிவான விளக்கங்கள் தர வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர், உயர் கல்வித்துறையில் இந்தியா போதிய வளர்ச்சியை எட்டாதது ஏன் என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பதிலளித்தார்.