சென்னை: சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சித் தேர்தலையும் நடத்தக்கோரி தொடரப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதால், வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த ஜனவரியுடன் முடிவடைந்து விட்டது. எஞ்சிய மாவட்டங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் சேர்த்து நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, உள்ளாட்சி தேர்தலையும் அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலுடன் சேர்த்து உள்ளாட்சி தேர்தலையும் நடத்தினால் அரசுக்கு தேர்தல் செலவு வெகுவாகக் குறையும். அதிகாரிகளின் தேவை மற்றும் நேரமும் மிச்சப்படும். வாக்காளர்களும் தகுதியானவர்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்ய வாய்ப்பு ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் சேர்த்து நடத்த உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஏற்கெனவே தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதே” என்றனர். அதற்கு மனுதாரர் தரப்பில், “இனிவரும் காலங்களில் இதுபோல தேர்தல்களை ஒன்றாக நடத்த முயற்சிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டது.
“அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது” எனக் கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாட உத்தரவிட்டனர். அதையடுத்து மனுதாரர் தரப்பில் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்ததையடுத்து, அதையேற்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.