சென்னை: தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் உபரி நிதியை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகத்தில் முதலீடு செய்யும் வகையில் அறநிலையத் துறை சட்டத்தின் முதலீட்டு விதிகளில் திருத்தம் செய்து அறநிலையத் துறை கடந்த பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரியும், கோயில் நிதியை வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை விதிக்கக்கோரியும் ஆலயவழிபாட்டாளர் சங்கத் தலைவரான சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கோயில் சொத்துகளையும், நிதியையும் பாதுகாக்கும் நோக்கில்தான் அறநிலையத் துறை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அறநிலையத்துறை, சட்டத்துக்குப் புறம்பாக அந்த நிதியை அரசின் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வது என்பது ஏற்புடையதல்ல.
எனவே கோயில் நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும். அத்துடன் இது தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரவி சேஷாத்ரி, வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் ஆகியோர் ஆஜராகி, ``தமிழகம் முழுவதும் உள்ள பிரபல கோயில்களின் உபரி நிதியான ரூ.2 ஆயிரத்து 700 கோடி சட்ட விரோதமாக அரசின் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருப்பது, கோயில் நிதியை அரசின் அன்றாட செலவினங்களுக்கு மடைமாற்றம் செய்வது போல் உள்ளது.
அந்த முதலீடு பாதுகாப்பானதா, கோயில் நிதி வட்டியும், முதலுமாக எப்போது சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும் என எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே இதன்மூலம் கோயில்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம் மற்றும் ரிசர்வ் வங்கி நிர்வாகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.