மதுரை: பாஜக தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் நீதிபாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் மனோ தங்கராஜ், தனது முகநூல் பக்கத்தில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி இடம் பெற்றிருப்பதாக வீடியோ பதிவிட்டுள்ளார்.
அது போலியானது என பல்வேறு உண்மை கண்டறியும் நிறுவனங்கள் கூறியுள்ளன. எனினும், பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், போலியான வீடியோவை அமைச்சர் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அமைச்சரின் முகநூல் பதிவு சில நிமிடங்களில் பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. இதனால் சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரின் இந்த நடவடிக்கை பிஎன்எஸ் சட்டப்படி 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும். இது தொடர்பாக அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவில்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி புகார் அளித்தேன்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, எனது புகாரின் பேரில் அமைச்சர் மனோதங்கராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, “மனு தொடர்பாக கோவில்பட்டி காவல் ஆய்வாளர் பதில் அளிக்க வேண்டும். விசாரணை மார்ச் 12-க்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.