சென்னை: வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, ‘இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்’ என வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பதிவு அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடும் என எச்சரிக்கும் வகையிலேயே உள்ளது என்றும், வன்முறையையோ அல்லது வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை என்றும் கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்து கடந்தாண்டு நவம்பரில் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி, அந்த வழக்கின் புகார்தாரரான எல்ஐசி ஏஜென்ட் சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது. அதையடுத்து நீதிபதி, இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.