தமிழகம்

சார்பு ஆய்வாளர் எழுத்துத் தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி

கி.மகாராஜன்

மதுரை: சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு டிச.21-ல் உதவி காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை நடத்தியது.

இந்தத் தேர்வில் பிரிவு ஏ-யில் தமிழ்ப் பகுதி தேர்வு வினாக்கள் இடம் பெற்றிருந்த நிலையில், பிரிவு பி-யில் பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இல்லை. அதற்கு பதிலாக உளவியல் பகுதியில் இருந்து 10 வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டிருந்தது.

          

எனவே, காவல் உதவி ஆய்வாளர் தேர்வை ரத்து செய்தும், தேர்வு முடிவை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ‘தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ் தகுதி தேர்வில் நூறு வினாக்கள் கேட்கப்பட்டது. தேர்வை ரத்து செய்யக் கூடாது’ என வாதிடப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ‘சார்பு ஆய்வாளர் தேர்வில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை. குறிப்பிட்ட பிரிவில் இவ்வளவு வினாக்கள் கேட்கப்பட வேண்டும் என மனுதாரரால் கோர முடியாது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் தமிழில் போதுமான வினாக்கள் கேட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT