பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் நேற்று சென்னை திரும்பினர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 11 மணி வரை இந்த நிலை நீடித்தது. | படங்கள்: எம்.முத்துகணேஷ் |
சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 4 நாட்கள் பொங்கல் விடுமுறை ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்ததால், நேற்று பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் நேற்று முன்தினம் மதியம் முதல் பயணத்தை தொடங்கினர்.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுடன் கூடுதலாக 30-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
அனைத்துச் சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், டிக்கெட் கிடைக்காத பொதுமக்கள் பொதுப் பெட்டியிலும் பயணித்தனர். இதனால் ரயில்கள் நிரம்பி வழிந்தன.
தாம்பரம், சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நேற்று அதிகாலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும், தமிழக போக்குவரத்து துறை சார்பிலும் கூடுதலாக சென்னை நகருக்கு மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இது தவிர, சொந்த வாகனங்களில் சென்றவர்கள் நேற்று சென்னை நோக்கி படையெடுத்தனர். இதன் காரணமாக, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, விக்கிரவாண்டி - விழுப்புரம் சாலை, மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் பல கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை பிற்பகல் வரை நீடித்தது.
சென்னை புறநகரிலும் சிங்கப்பெருமாள் கோயில் முதல் தாம்பரம் ஜிஎஸ்டி சாலை வரை என பல்வேறு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று அதிகாலை முதல் கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டது.
நண்பகல் வரை பல்வேறு ஊர்களில் பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால், நேற்று மதியம் வரை கிளாம்பக்கத்தில் அதிகளவில் பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
இதனிடையே, நெம்மேலியில் முதல்வர் பங்கேற்ற விழா நேற்று நடந்ததால், கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், ஏராளமான போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால், ஜிஎஸ்டி சாலையில் நெரிசலை கட்டுப்படுத்த போதுமான போலீஸார் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.