தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பேசிய உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்.
தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உரிய நேரத்தில் பொதுவெளிக்கு வருவார் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ம்
தேதி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.
உலகளவில் தமிழ் மற்றும் திராவிட ஆய்வுலகில் முன்னோடியாகவும், தமிழுக்கும், திராவிடவியலுக்கும் தொண்டாற்ற பல நிறுவனங்களை உருவாக்கியவரும், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியதில் சிறப்பான பங்கு வகித்தவருமான வ.அய்.சுப்பிரமணியத்தின் தன்னிகரற்ற தமிழ்த் தொண்டைப் போற்றிப் பாராட்டும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இதில், பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு ஓராண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து பல்கலைக் கழகங்களிலும் வ.அய்.சுப்பரமணியம் தொடர்பாக ஆராய்ச்சி இருக்கை அமைக்க வேண்டும். தமிழகத்தில் ஆளும் கட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது குறித்து ஓராண்டுக்கு பிறகு கருத்து கூறுவது தான் சரியாக இருக்கும்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். இதை நான் 2009-ம் ஆண்டு முதல் தெரிவித்து வருகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார். தற்போது வெளியே வருவதற்கான சர்வதேச சூழ்நிலை இல்லை. பிரபாகரன் மகள் ஏற்கெனவே தொலைக்காட்சி முன்பு தோன்றி பேசி உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.