சென்னை: மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட அடிப்படை கொள்கையில் இருந்து அணுவளவும் பிறழ மாட்டோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் தனது சொந்த செலவில் இஃப்தார் நிகழ்வு நடத்துவதை முதலில் தொடங்கி வைத்தவர் ஜெயலலிதா.
இஸ்லாமியர்களை அவர் அதிகம் நேசித்தார். அவரது விசுவாசத் தொண்டர்களான நாம், அதை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். அனைத்து சமயங்களையும் மதிக்கும் மக்களைக் கொண்ட அற்புதமான மாநிலம் தமிழகம்.
உங்கள் ஆசீர்வாதத்தையும் அன்பையும் பெற்று நானும் மதச்சார்பின்மை, சமய நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை உயிர் மூச்செனகொண்டு தொடர்ந்து உழைத்து வருகிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலமும், எனது ஆட்சியும் சிறுபான்மை மக்களுக்கு பொற்காலமாக அமைந்ததை வரலாறு சொல்லும்.
அதிமுக சார்பில் இஃதார் நோன்பு திறப்பு எழும்பூரில் நேற்று நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக தலைவர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆட்சியின் அவலங்களை தூய்மைப்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதை அர்ப்பணிப்பாலும், அன்பாலும் செய்ய வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அடிப்படைக் கொள்கையில் இருந்து அணுவளவும் பிறழ மாட்டோம்.
மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாது காப்பில் சமரசமற்ற உறுதி, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எல்லோருக்கும் எல்லாம் என்றவாறு ஆட்சி நடத்துவோம்.
திமுகவும், கூட்டணிக் கட்சியினரும் ஏதோ அவர்கள்தான் சிறுபான்மை மக்களை காத்துக்கொண்டிருப்பது போல தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சிறுபான்மை மக்களை கண்ணை இமை காப்பதுபோல காப்பது அதிமுக தான் என்றார்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.