புதுடெல்லி: வேட்பு மனுவில் முக்கியத் தகவலை மறைந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்புமனுவில் முக்கியத் தகவலை மறைத்ததாக மிலானி அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கு தடை கோரிய பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: வேட்புமனுவில் முக்கியத் தகவலை மறைப்பது தெரியவந்தால் யார் வேண்டுமானாலும் வழக்கு தொடர மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அனுமதிக்கிறது.
வேட்பு மனுவில் முக்கியத் தகவலை மறைத்தது தொடர்பான மனுவை விசாரித்துப் புலன்விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு.
இந்த விவகாரத்தில் தொகுதியின் வாக்காளர் அல்லது போட்டியிட்டு தோல்விடைந்த வேட்பாளர் மட்டுமே வழக்கு தொடர முகாந்திரம் உண்டு என்ற வாதம் ஏற்புடைதல்ல.
எனவே, பழனிசாமியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் விளக்க மனு தாக்கல் செய்ய 4 வார அவகாசம் கோரிய பழனிசாமியின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், விசாரணையை மே 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.
வேட்புமனுவில் முக்கியத் தகவலை மறைத்த விவகாரத்தில் பழனிசாமிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.