சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால்தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்துக்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பள்ளி மாணவர்கள் இடையேயான மோதலில் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எடை தராசால் அடித்து காய்கறி கடைக்காரர் கொலை செய்யப்பட்டுள்ளார். தென்காசியில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை போலீஸார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவிலில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து திருட முயற்சி நடந்துள்ளது என தொடர்ச்சியாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பள்ளி மாணவர்கள் இடையே படிப்புதான் வளர வேண்டும்.
ஆனால், ஸ்டாலின்ஆட்சியில் வன்முறை போக்குதான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்த தவறியதற்கு முதல்வரின் அரசு வெட்கப்பட வேண்டும்.
விவசாயி, வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே பகல், இரவென எந்த நேரத்திலும் துளிகூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவலத்தின் மொத்த உருவான ஆட்சியைத் தான் ஸ்டாலின் நடத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சீர்கெட்டுள்ளது.
சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வர் இதை எப்போது உணரப் போகிறாரோ? ஆட்சியில் இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.