தமிழகம்

பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா இன்று (மே 24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே 30-ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு இன்று (மே 24) காலை 8.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் அழகர்சாமி, அறங்காவலர் அன்னபூரணி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்ளுக்கு காட்சியளிப்பார்.

விழாவின் 6-ம் நாளான மே 29-ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக மே 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் தேரேற்றம், மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது. நான்கு ரத வீதிகளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஜூன் 2-ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சியும், இரவில் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT