ஜஸ்டின் மணிகண்டன்
பழநி: பழநியில் ரூ.100 கோடி நிலப்பதிவு முறைகேடு விவகாரத்தில் சிக்கிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியாற்றிய பழநி, ஒட்டன்சத்திரம் உள்பட 4 சார்பதிவாளர் அலுவலகங்களில் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர்.
பழநி நில விவகாரம் மட்டுமின்றி பழநியில் உள்ள 1.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு பதிவு செய்து கொடுத்ததாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணி கண்டன் மீது மேலும் ஒரு புகார் எழுந்தது.
அவரது பணிக்காலத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் ஆராய சிவகங்கை உதவி பதிவுத்துறை தலைவர் சீனிவாசன் தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் பழநி மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் 2-வது நாளாக நேற்று பழநி மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் ஆய்வு நடந்தது.
ஜஸ்டின் மணிகண்டன் ஏற்கெனவே பணியாற்றிய ஒட்டன் சத்திரம், குஜிலியம்பாறை, கொடைக்கானலில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 3 குழுக்களாகப் பிரிந்து சென்று ஆய்வு செய்தனர். இன்று விடுமுறை நாளிலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் நேற்று 6-வது நாளாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். நாளையுடன் (ஆக. 3)அவருக்கு நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை இடைக்கால முன்ஜாமீன் முடிவடைகிறது. அதன் பின்பு அவரை கைது செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிலமோசடி வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப் பட்ட நிலையில், நிலத்தரகர், ஆவணம் தயார் செய்து கொடுத்தவர் உள்பட மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.