ஒத்திவாக்கத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
செங்கல்பட்டு / உத்திரமேரூர்: ஒத்திவாக்கம், உத்திரமேரூரில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. இவற்றை கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம், ஒத்திவாக்கத்தில் தேசிய கூட்டுறவு இணையம் வாயிலாக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஒரு வார காலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குக்கு கொண்டு செல்லப்படாமல் உள்ளன.
தற்போது மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள் ளது. உடனடியாக கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கிடங்குக்கு கொண்டு செல்ல அலுவலர்கள் வாகனங்களை அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை மூடிவைக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வழங்கப்படுவது போல் தார்ப்பாய் மற்றும் சணல் உள்ளிட்டவை தேசிய கூட்டுறவு நுகர்பொருள் இணையத்திலும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
உத்திரமேரூர் பகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். கடந்த நவரைப் பருவத்தில் ஏரி மற்றும் கிணற்றுப் பாசனத்தைப் பயன்படுத்தி உத்திரமேரூர் அருகே உள்ள அரும் புலியூர், பழவேரி, கரும்பாக்கம், களியப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நெல் சாகுபடி செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணி மந்தமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளுக்கு லாரிகள் மூலம் உடனுக்குடன் ஏற்றிச் செல்லாததால். நிலையங்களிலேயே மூட்டைகள் மலைபோல் குவிந்துள்ளன. அரும்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் 8,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு தேக்கமடைந்துள்ளன. 10,000-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இன்னும் கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் காத்திருக்கின்றன.