மதுரை: திமுகவில் இணைந்ததால் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை தனது காரில் வைத்ததில் எந்த தவறுமில்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நான் எந்தவித மனப் போராட்டத்திலும் இல்லை. மகிழ்ச்சியோடுதான் திமுகவில் இணைந்துள்ளேன்.
கழக நிர்வாகிகள் என்னை சகோதரனை போல் அன்போடு வரவேற்றனர். அனைத்து தரப்பு மக்களையும் சமநோக்கோடு வழி நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.
திமுகவில் இணைந்துள்ளதால் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை எனது காரில் வைத்ததில் எந்த தவறுமில்லை. அதிமுக இந்த தேர்தலில் படுதோல்வி அடையும். முதல்வர் நிற்க சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்.
நானும், எனது ஆதரவாளர்களும் மு.க.ஸ்டாலின் கட்டளைப்படி நடப்போம். மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் எனக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்படுகிறதோ அதன்படி செயல்படுவேன். தேசிய ஜனநாயக கூட்டணி எத்தனை கூட்டம் நடத்தினாலும், தோல்வியை தான் தழுவும்.
அடித்தட்டு மக்கள் சமமாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னையே தந்தவர் பெரியார். அவரது புகைப்படத்தை அகற்றியது கடும் கண்டனத்துக்குரியது” இவ்வாறு அவர் கூறினார்.