

மதுரை: "பொதுவாக நன்றாக பணிபுரிவதில் அமைச்சர்களிடம் ஆரோக்கியமான போட்டி இருக்கும். திமுகவில் மோசடி செய்வதில் அமைச்சர்களிடம் போட்டா போட்டி உள்ளது. பணியிடமாற்றம், அரசுப்பணி, அரசு ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் அரசு மேலும் தொடர்வதற்கு தார்மீக உரிமையில்லை" என மதுரையில் பிரதமர் மோடி பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் 2வது தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: இது பாண்டிய நாடு. வீரம் விளையும் பூமி. இந்த மகத்தான பூமியிலிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரன் அழகுமுத்துகோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், இமானுவேல் சேகரனார் பங்களிப்பை நினைவு கூறுகிறேன்.
இங்கு வருவதற்கு முன்பு திருப்பரங்குன்றம் சென்று முருகனை தரிசனம் செய்து வந்தேன். தமிழ்நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் வேண்டினேன்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்
அதே நேரத்தில் என் இதயம் பூர்ணசந்திரன் என்ற இளம் பக்தரின் உயிர்த் தியாகத்தை நினைத்து வருந்தியது. அவரது மனைவி, 2 மகன்களைச் சந்தித்தேன். அவர்களிடம் என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தேன். அவரின் ஆன்மா அமைதியடைய என் உருக்கமான பிரார்த்தனையை முருகனின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன். இந்த சம்பவம் திமுக அரசின் நியாயமற்ற செயல்பாட்டால் நடந்திருக்கிறது. இது வலியை ஏற்படுத்துகிறது. இறுதியில் வாய்மை வெல்லும், முருகனின் பக்தர்கள் வெல்வார்கள்.
தமிழ்நாட்டில் சிலர் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என்ற கனவில் உள்ளனர். இந்த கூட்டத்தை பார்த்த பிறகு அந்த கனவு கற்பனையாகவும், கானல் நீராகவும் மாறிவிடும். தமிழகத்திலிருந்து திமுக வெளியேற்றப்பட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது உங்கள் கண்களில் தெரிகிறது.
தமிழக மக்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ல் திமுகவுக்கு பெரும்பான்மை பலத்தை கொடுத்தனர். இருப்பினும் அவர்களால் நல்ல ஆட்சியை தர முடியவில்லை. மாநிலத்தை கொள்ளையடித்தனர். பரம்பரை ஆட்சியை முன்னெடுக்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்புகளை மண்னோடு மண்ணாக்க பார்க்கிறார்கள்.
மதுரை எம்ஜியாருக்கு உறுதுணையாக நின்ற மாநகரம். இதனால் மதுரை என்றால திமுகவுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. மதுரையில் திமுக கொள்ளை கூட்ட அரசியலை அறிமுகம் செய்தது. மோசமான சலைகள், கேவலமான கழிவுநீர் வாய்க்கால்களை அளித்தனர். சுகாதாரம், தூய்மையை தரைமட்ட அளவுக்கு கொண்டுச் சென்றனர். ஊழல் காரணமாக மதுரை மேயர், பதவியை ராஜினமா செய்தார். பணம் நமக்கு, பிரச்சினைகள் மக்களுக்கு என்பதே திமுகவின் மாடல்.
திமுகவினர் அவர்களாகவும் பணியாற்ற மாட்டார்கள், மற்றவர்களையும் பணியாற்ற விடமாட்டார்கள். பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அதில் 3 லட்சம் வீடுகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன. திமுக அரசு கள ஆய்வுகளை இன்னும் முடிக்காமல் உள்ளது. திமுகவின் சில்லறைத்தனமான அரசியலுக்கு ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?
தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உரிமைகளுக்காக வாய்கிழிய பேசும் திமுக, மத்திய ஆட்சியில் இடம் பெற்றிருந்தபோது ஒன்றுமே செய்யவில்லை.
பாம்பன் பாலம் நூறு ஆண்டுகள் இருந்தது. பழமை காரணமாக அதை மாற்றியிருக்க வேண்டும். 2004 முதல் 2014 வரை திமுக - காங்கிரஸ் அரசு என்ன செய்து கொண்டிருந்தது? பாலத்தை ரயில்கள் மெதுவாக கடக்க வேண்டியதிருந்தது. மத்திய அரசு அதை விட மெதுவாக கடந்தது. பாஜக அரசு தான் பாம்பனில் நவீன தூக்கு பாலத்தை கட்டி திறந்தது. நாங்கள் வேலையில் வேகம் காட்டினோம். இதனால் பாலத்தை ரயில்கள் வேகமாக கடக்கின்றன.
தமிழ்நாட்டில் பெண்கள் பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளனர். குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. போதை மாபியாக்கள் மற்றும் மதுவால் குடும்பங்கள் பாதிக்கப்படுவதை பெண்கள் கவனிக்கின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் பெண்களின் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை பெண்கள் இப்போது நினைத்து பார்க்கின்றனர்.
தமிழக பெண்கள் அனைவருக்கும் நான் உறுதியளிக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வந்தவுடன் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவோம். குற்றவாளிகள், போதை மாபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், அதிகார பரவலாக்கத்தை உறுதி செய்யும்.
அரசியலில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் காமராஜர். திமுக அவருக்கு எதிர்மாறாக உள்ளது. பணியிடமாற்றம், அரசுப்பணி, ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
பொதுவாக நன்றாக பணிபுரிவதில் அமைச்சர்களிடம் ஆரோக்கியமான போட்டி இருக்கும். திமுகவில் மோசடி செய்வதில் அமைச்சர்களிடம் போட்டா போட்டி உள்ளது. ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகளிடம் இருந்து திருடுகின்றனர். இப்படிப்பட்ட ஊழல் அரசு மேலும் தொடர தார்மீக உரிமையில்லை. இதனால் தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை கொண்டு வர தீர்மானித்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி தூய்மையான, திறமையான அரசை அளிக்கும்.
காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து 60 ஆண்டுக்கு முன்பே நீக்கிய மாநிலம் தமிழ்நாடு. இதனால் தான் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தமிழக மக்களை காங்கிரஸ் அரசு வஞ்சம் தீர்த்தது. அப்போது திமுக வாய்மூடி மவுனியாக இருந்தது. மத்திய காங்கிரஸ் அரசுக்கு திமுக ஆதரவு அளித்த போது ஜல்லிக்கட்டை தடை செய்தார்கள். பாஜக அரசு தான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழுக்கு மரியாதை அளித்தோம்.
அண்மையில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் 28 முன்னேறிய நாடுகளுடன் நாம் இணைந்துள்ளோம். இதனால் இளைஞர்கள், பணியாளர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும்.
தமிழ்நாட்டில் ஜவுளி, மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, காடல்சார் உணவுப் பொருட்கள், சிறு, குறு, மத்திய தொழில் துறைக்கு உலகளாவிய சந்தைகள் கிடைக்கும். தமிழக இளைஞர்களுக்கு பல லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உலகளவில் போட்டியிட்டு வெற்றி பெறும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
இவை எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசு இருக்க வேண்டும். அது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் மட்டுமே முடியும். தேசிய ஜனநாயக் கூட்டணி அரசால் மட்டுமே நிலையான, மக்களை மையமாக கொண்ட அரசை அளிக்க முடியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை, இந்தியாவின் வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.