சென்னை: முதல் முறையாக வீடு, நிலம் வாங்குபவர்கள் இணைய வழியில் பத்திரப் பதிவு செய்யும் வசதி ஆக.17 முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் நேற்று கூறியதாவது: பத்திரப் பதிவுத் துறையில் லஞ்சத்தை ஒழிக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் தவெக ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்லாமல் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் இணைய வழியில் தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்து பதிவு செய்யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ திட்டம் ஆக.17-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டம் முதல் முதலாக வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு மட்டுமே பொருந்தும்.
இதற்காகப் பதிவுத் துறை இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நில விற்பனையாளர்களுக்குப் பிரத்யேக வசதிகள் செய்து தரப்படும். அவர்கள் கைரேகை இயந்திரம், கருவிழிப் படலம் கவரும் கருவி மற்றும் ‘வெப் கேம்’ வைத்திருக்க வேண்டும். இதன்மூலம், ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் ஆதார் விவரங்கள், படம், கைரேகை அல்லது கருவிழிப் படலம் சரிபார்க்கப்பட்டு இணைய வழியில் கட்டணம் செலுத்தலாம். தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் சார் பதிவாளருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ, கூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ அவர் இணைய வழியில் கேள்வி எழுப்புவார்.
அதற்கு விண்ணப்பதாரர் 30 நாட்களுக்குள் ஆன்லைனிலேயே பதிலளிக்க வேண்டும். பதிவு செய்த ஆவணம் அடுத்த வேலை நாளுக்குள் சார் பதிவாளரின் மின் கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை 60 நாட்கள் வரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணம் வாங்கும் அதிகாரிகள் குறித்து புகார் வந்தால் உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுத் துறையில் இந்தாண்டு ரூ.31 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘தெரு மதிப்பு' தொடர்பான நடைமுறைப் பிரச்சினைகளுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும். பட்டா வழங்குவது வருவாய்த் துறை பணி என்றாலும், எங்கள் துறையில் தானியங்கி முறையில் நிலத்தைப் பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாறுதல் நடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலை புறம்போக்கு, சதுப்பு நிலம் உள்ளிட்டவற்றுக்கு எக்காரணம் கொண்டும் பட்டா வழங்கப்படாது. இவ்வாறு அமைச்சர் லோகேஷ் கூறினார்.