சென்னை: வெளிச் சந்தையில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு அங்காடிகள், ரேஷன் கடைகளி்ல் ரூ.35 மானிய விலையில் ஒரு கிலோ வெங்காயம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் நேற்று தொடங்கி வைத்தனர்.
வெளிச் சந்தையில் வெங்காயம் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED), தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவை மூலம் முதல்கட்டமாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து 1,000 டன் வெங்காயத்தை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.
இந்நிலையில், கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள நியாயவிலைக் கடையில் முதல் விற்பனையை தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் பி.அமுதா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
8,914 கடைகள்
தமிழகம் முழுவதும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலைகள், பிரதம கூட்டுறவு பண்டக சாலைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள், பண்ணை பசுமைக் கடைகள் உட்பட மொத்தம் 8,914 கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும்.
இதன்மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளை அணுகி, கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் வெங்காயத்தைப் பெற்று பயனடையுமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.