ஓமந்தூரார் மருத்துவமனையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 210 செவிலியர்கள் திடீரென சேலம், திருச்சி, செங்கல்பட்டு மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றுப் பணி அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு செவிலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதிய பணியிடங்களை உருவாக்காமல், ஒரு மருத்துவமனையில் இருக்கும் பணியிடங்களைக் குறைத்து, மற்றொரு மருத்துவமனைக்கு பணியிட மாறுதல் வழங்குவது முறையல்ல என்று செவிலியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது மறைமுகமான ஆட்குறைப்பு நடவடிக்கை என்றும், இதனால் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரசின் இந்த முடிவைக் கண்டித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் செவிலியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 2-வது நாளாக, நேற்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள், ‘அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் ஆட்குறைப்பு தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை அணிந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் இந்த நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும் என செவிலியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.